கிணற்றுக்குள் கார் பாய்ந்து சாப்ட்வேர் என்ஜினீயர் பலி- மனைவி, மகள் காயத்துடன் மீட்பு
திண்டுக்கல்: பெங்களூரில் சாப்ட்வேர் என்ஜினீயராக பணியாற்றும் சிவனேசன் குடும்பத்துடன் காரில் வந்து போது, திண்டுக்கல் அருகே கட்டுப்பாட்டை இழந்த கார் கிணற்றுக்குள் பாய்ந்தது. இதில் சிவனேசன் சம்பவ இடத்திலேயே நீரில் மூழ்கி பலியானார். அவரது மனைவி மற்றும் மகள் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு அடுத்த அண்ணா நகரை சேர்ந்தவர் சந்திரமோகன். ஜவுளிக்கடை அதிபரான இவரது மகன் சிவனேசன்(33). சாப்ட்வேர் என்ஜினீரான இவர், பெங்களூரில் வேலை செய்து வந்தார். இந்த நிலையில் சிவனேசனின் தங்கை திருமணத்திற்காக ஏற்பாடுகளை செய்வதற்காக, குடும்பத்துடன் பெங்களூரில் இருந்து காரில் சொந்த ஊருக்கு புறப்பட்டனர்.
காரை சிவனேசன் ஓட்ட, பின்னால் இருக்கையில் அவரது மனைவி ரோகிணி(30) மற்றும் மகள் அஸ்வினி(2) ஆகியோர் இருந்தனர். திண்டுக்கலை கடந்து, கொடைரோடு வழியாக கார் வத்தலக்குண்டு நோக்கி வந்து கொண்டிருந்தது. இரவு 10 மணி அளவில் வத்தலக்குண்டு அடுத்த பூசாரிபட்டி பிரிவை அடைந்த கார், திடீரென கட்டுப்பாட்டை இழந்தது.
சாலையில் தாறுமாறாக ஓடிய கார், சாலையோரத்தில் இருந்த 50 அடி ஆழம் கொண்ட தரைமட்ட கிணற்றில் விழுந்தது. கிணற்றில் 15 அடிக்கு தண்ணீர் இருந்ததால், கார் மெதுவாக மூழ்கியது. இதில் காரை ஓட்டி சென்ற சிவனேசன் மூச்சு திணறி பலியானார்.
ரோகிணி, குழந்தை அஸ்வினுடன் சேர்ந்து உயிரை காப்பாற்ற அலறினார். ஆனால் இரவு நேரம் என்பதாலும், கிணறு ஆழமானது என்பதாலும் ரோகிணியின் சத்தம் வெளியே கேட்கவில்லை. இந்த நிலையில் நேற்று காலையில் அவ்வழியாக சென்றவர்கள், கிணற்றில் இருந்து வந்த அலறல் சத்தம் கேட்டு, எட்டி பார்த்தனர். அப்போது கிணற்றுக்குள் கார் கிடப்பதை கண்டனர்.
இது குறித்து தகவல் அறிந்த வத்தலக்குண்டு தீயணைப்பு படையினர், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, ரோஹினியும், குழந்தை அஸ்வினியும் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அதன்பிறகு கிரேன் மூலம் கார் கிணற்றில் இருந்து வெளியே எடுக்கப்பட்டது.கிணற்றில் நீரில் மூழ்கி இழந்த சிவநேசனின் உடல், பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. இது குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.