ஈரானுக்கு அணு ஆயுத கருவிகள் அனுப்ப முயன்ற 4 ஜெர்மனியர்கள் கைது
ஹாம்பர்க்: ஈரானுக்கு அணு ஆயுத தொழில்நுட்பம் தொடர்பான கருவிகளை சட்டவிரோதமாக கடத்த முயன்ற 4 பேரை ஜெர்மனி கைது செய்துள்ளது.
கைதான மூன்று பேர் ஜெர்மானியர்கள், ஒருவர் ஈரான்-ஜெர்மனி இரட்டைக் குடியுரிமைப் பெற்றவர் ஆவார்.
ஈரானுக்கு இந்தக் கருவிகளை இவர்கள் அனுப்பத் திட்டமிட்டது குறித்து அமெரிக்க உளவுப் பிரிவினர் அளித்த தகவலையடுத்து, ஹாம்பர்க், ஓடென்பர்க், வெய்மர் ஆகிய நகர்களில் வீடுகள், அலுவலகங்களில் ஜெர்மனியின் சுங்கத்துறையினரும் போலீசாரும் ரெய்டு நடத்தி இவர்களைக் கைது செய்தனர்.
அணு உலைக்குத் தேவையான கனநீரைத் தயாரிக்கத் தேவையான சுமார் 7 மில்லியன் யூரோ மதிப்புள்ள கருவிகள், வால்வுகளை இவர்கள் ஈரானுக்கு துருக்கி மற்றும் அஸர்பைஜான் நாடுகள் வழியாக அனுப்ப இருந்ததாகத் தெரிகிறது. ஏற்கனவே இவர்கள் சில கருவிகளை ஈராணுக்கு அனுப்பியிருக்கலாம் என்றும் தெரிகிறது.
ஈரானிய அணு உலைகள் மீது அடுத்த 30 நாட்களுக்கு தொடர் தாக்குதல் நடத்த இஸ்ரேல் தயாராகி வருவதாக செய்திகள் பரவியுள்ள நிலையில், ஜெர்மனியின் இந்தக் கைதுகள் அரங்கேறியுள்ளன.