பாக். விமான படை தளம் மீது தாக்குதல்-8 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை-விமானங்களை கடத்த திட்டம்?
இஸ்லாமாபாத்: பாகிஸ்தானின் முக்கிய விமான தளங்களில் ஒன்றான காம்ரா படை தளம் மீது தீவிரவாதிகள் இன்று அதிகாலை திடீரென தாக்குதல் நடத்தினர். இதையடுத்து விமானப் படையினருக்கும் தீவிரவாதிகளுக்கும் இடையே நிகழ்ந்த மோதலில் 8 தீவிரவாதிகள் உயிரிழந்தனர். பாகிஸ்தான் படைத்தரப்பில் 2 பேர் உயிரிழந்தனர்.
பாகிஸ்தான் நாட்டின் முக்கிய விமானப் படை தளங்களில் ஒன்று காம்ரா தளம். இது தலைநகர் இஸ்லாமாபாத்தில் இருந்து 80 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. இத்தளத்தைக் கைப்பற்ற கடந்த பல ஆண்டுகளாகவே தீவிரவாதிகள் அடிக்கடி தாக்குதல் நடத்தும் முக்கிய இலக்காக இத்தளம் இருந்து வருகிறது. காம்ரா தளத்தில் அணு ஆயுதங்கள் வைக்கப்பட்டிருக்கக் கூடும் என்பதுதான் தீவிரவாதிகளின் இலக்குக்குக் காரணம் என்றும் கூறப்படுகிறது. இதேபோல் மிராஜ் போன்ற போர் விமானங்களை கடத்திச் செல்லவும் தீவிரவாதிகள் திட்டமிட்டிருந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில் இன்று அதிகாலை 2 மணியளவில் பாகிஸ்தான் ராணுவத்தினரைப் போல் சீருடையணிந்திருந்த தீவிரவாதிகள் 10 பேர் காம்ரா தளத்துக்குள் நுழைந்து அதிரடித் தாக்குதலை நடத்தினர் .இதையடுத்து படைத்தரப்பினரும் பதில் தாக்குதல் நடத்தினர். இருதரப்பினரிடையேயான மோதல் சுமார் 5 மணிநேரத்துக்கும் மேலாக நீடித்தது.
மோதலின் முடிவில் 8 தீவிரவாதிகளும் 2 படையினரும் உயிரிழந்திருப்பதாக அறிவிக்கப்பட்டது. இருப்பினும் தீவிரவாதிகள் தப்பியோடியது பற்றி அதிகாரப்பூர்வமாக எந்த ஒரு தகவலும் வெளியிடப்படவில்லை.
சில நாட்களுக்கு முன்புதான் பாகிஸ்தான் ராணுவ தளபதி கயானி, பயங்கரவாதத்துக்கு எதிராக பாகிஸ்தான் கடும் நடவடிக்கை எடுக்கும் என்று எச்சரித்திருந்தார். கயானியின் கருத்துக்கு பதிலடி கொடுக்கும் விதமாக இத்தாக்குதல் நடத்தப்பட்டிருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. இதேபோல் காம்ரா வான்படை தளத்தில் அணு ஆயுதம் எதுவும் பதுக்கி வைக்கப்பட்டிருக்கவில்லை என்றும் பாகிஸ்தான் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டிருக்கிறது.