நாசிக்கில் உயிருடன் புதைக்கப்பட்ட பச்சிளம் குழந்தையை மீட்க உதவிய 10 வயது சிறுமி
நாசிக்: மகாராஷ்டிரா மாநிலத்தில் உயிருடன் புதைக்கப்பட்ட பச்சிளம் குழந்தையை உயிருடன் மீட்க உதவிய 10 வயது சிறுமியை அனைவரும் பாராட்டினர்.
மகாராஷ்டிரா மாநிலம், நாசிக் மாவட்டத்தில் உள்ள நகர்சுல் கிராமத்தைச் சேர்ந்தவர் 10 வயது சிறுமி சுரக்ஷியா. நேற்று சுரக்ஷியா தனது உறவினர் வீட்டு குழந்தையுடன் வீட்டுக்கு வெளியே விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது அப்பகுதியில் உள்ள ஒரு பள்ளத்தில் 2 பேர் பச்சிளம் குழந்தையை உயிருடன் புதைத்துவிட்டு பைக்கில் தப்பியோடிவிட்டனர்.
குழந்தை அழும் சத்தம் கேட்ட சுரக்ஷியா தனது தந்தை சாய்நாத் மோரேயிடம் நடந்ததைக் கூறினார். உடனே மோரே தனது நண்பர்கள், போலீசாருடன் அந்த இடத்திற்கு சென்று பள்ளத்தில் குழி தோண்டி புதைக்கப்பட்ட குழந்தையை மீட்டு அருகில் உள்ள நகர்சுல் ஆரம்ப சுகாதார மையத்திற்கு கொண்டு சென்றனர். அங்கு முதலுதவி அளிக்கப்பட்ட பிறகு குழந்தை நாசிக் சிவில் மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. அங்கு குழந்தை இன்குபேட்டரில் வைத்து கண்காணிக்கப்படுகிறது. குழந்தை தற்போது நலமாக உள்ளதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன.
இந்த சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார் தப்பியோடிய இருவரை தேடி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications