கரூரில் கண்டு கொள்ளப்படாத பி.ஆர்.பி.கிரானைட் கம்பெனி: பின்னணியில் அதிகார வர்க்கம்?
கரூர்: கரூர் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் பி.ஆர்.பி. கிரானைட் நிறுவனத்திற்கு சொந்தமான குவாரியில் சோதனை நடத்த அதிகாரிகள் தயக்கம் காட்டி வருவதாகக் கூறப்படுகின்றது.
மதுரை மாவட்டம் மேலூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் 125க்கும் மேற்பட்ட கிரானைட் குவாரிகள் செயல்பட்டு வந்தன. இந்தக் குவாரிகளில் அனுமதிக்கப்பட்ட அளவை விட கிரானைட் வெட்டி எடுக்கப்படுகிறது என்று புகார் எழுந்தது. இதையடுத்து இது குறித்து ஆய்வு செய்த முன்னாள் மதுரை கலெக்டர் சகாயம் கிரானைட் குவாரிகளால் அரசுக்கு ரூ.16,000 கோடி வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக அறிக்கை அளித்தார்.
அதன் அடிப்படையில் தற்போதைய கலெக்டர் அன்சுல் மிஸ்ரா உத்தரவின்பேரில் கடந்த பல நாட்களாக குவாரிகளில் தீவிர சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இந்த நிலையில் அன்சுல் மிஸ்ரா, எஸ்.பி. பாலகிருஷ்ணன் ஆகியோர் நேரடியாக ஆய்வு நடத்தி பி.ஆர்.பி. கிரானைட் குவாரியில் முறைகேடு நடைபெற்றதை உறுதி செய்தனர். இதையடுத்து மேலூர் அருகே தெற்குத் தெருவில் உள்ள பி.ஆர்.பி. கிரானைட் நிறுவனத்திற்குச் சீல் வைத்தனர்.
அந்நிறுவனத்திற்கு சொந்தமான குவாரி கரூர் மாவட்டம் தோகமலை அருகே செயல்பட்டு வருகின்றது. அங்கும் அரசை ஏமாற்றி உள்ளதாக சமூக சேவர்கள் பலர் அரசு அதிகாரிகளிடம் புகார் தெரிவித்துள்ளனர். ஆனால் அந்த நிறுவனம் மீது நடவடிக்கை எடுத்தால் கரூர் மாவட்டத்தில் பல முக்கிய அதிகாரிகள் சிக்குவார்கள் என்பதால் நடவடிக்கை எடுக்க உயர் அதிகாரிகள் தயக்கம் காட்டி வருவதாக எதிர்க் கட்சிகளின் சார்பில் குற்றம் சாட்டுப்படுகிறது.
மேலும், பிரச்சனை மதுரை மாவட்டத்தில் தானே தவிர கரூர் மாவட்டத்தில் அல்ல. அதனால் கரூரில் உள்ள அவர்களது குவாரிக்கு சிக்கல் வராமல் பாதுகாத்தால் சிறந்த பலனை அடைய முடியும் என ஒரு சில அதிகாரிகள் தரப்பு கணக்கு போட்டு காய் நகர்த்தி வருவதாகவும் கூறப்படுகின்றது.
எனவே, கரூர் மாவட்டம் தோகமலையில் செயல்படும் பி.ஆர்.பி.க்குச் சொந்தமான குவாரி உள்பட முக்கியக் குவாரிகள் குறித்து உளவுத்தறை அதிகாரிகள் மற்றும் சிறப்பு அதிகாரிகள் கொண்ட குழு மூலம் விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட வேண்டும் என இப்பகுதி மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.