பொதுமக்கள் கோபத்திலிருந்து தப்பிக்க பத்மா சேஷாத்ரி நிர்வாகம் இரங்கல் - விடுமுறை!
பிள்ளையை இழந்த சோகத்தில் தவிக்கும் பெற்றோரும் உறவினரும், பத்மா சேஷாத்ரி பள்ளி நிர்வாகிகளை கைது செய்ய வேண்டும் என்று கோரி வரும் சூழலில், பள்ளியில் பணியாற்றிய 5 பேரை மட்டும் போலீஸ் கைது செய்துள்ளது.
இதனால் ஆத்திரத்தில் உள்ள பெற்றோர், திருமதி ஒய்ஜிபி, ஒய்ஜி மகேந்திரன் உள்ளிட்டோரை கைது செய்யக் கோரி வருகிறார்கள்.
இந்த சூழலில், பத்மா சேஷாத்ரி பள்ளி நிர்வாகம் சார்பில் திருமதி ஒய்ஜிபி இன்று ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அதில், "மாணவன் ரஞ்சன் மறைவு எங்களை அதிர்ச்சியில் ஆழ்த்திவிட்டது. இந்த மரணம் துரதிருஷ்டவசமானது, மிகப்பெரிய துயரம் தரும் இழப்பு.
பத்மா சேஷாத்ரி குழுமம், தன் ஒவ்வொரு மாணவனையும் குடும்ப உறுப்பினர் போலத்தான் கருதுகிறது.
எங்கள் அன்புக்குரிய ரஞ்சன் மறைவுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் இன்று (17 ஆகஸ்ட்) பள்ளிக்கு முழு விடுமுறை அறிவிக்கிறோம்.
இந்த கொடுந்துயரிலிருந்து ரஞ்சனின் குடும்பத்தார் மீண்டு வரும் வல்லமையைத் தர பிரார்த்திக்கிறோம். - அன்புடன் திருமதி ஒய்ஜி பார்த்தசாரதி".
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
முதல்வர், தாளாளரை கைது செய்யக்கோரி ஆர்ப்பாட்டம்:
இந் நிலையில் பள்ளி முதல்வர், தாளாளரை கைது செய்யக்கோரி அகில இந்திய மாணவர் சங்கம் சார்பில் பள்ளி முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட தலைவர் சரத்குமார் தலைமை தாங்கினார். அவர் கூறுகையில், பள்ளி நிர்வாகத்தின் கவனக்குறைவு காரணமாக மாணவர்கள் மரணமடைவது தொடர்ந்து நடந்து வருகிறது. இதனை தடுக்க தனியார் பள்ளி மீது கடுமையான விதிமுறைகளை அரசு கொண்டு வரவேண்டும் என்றார்.
அதே போல சில மாணவர்களின் பெற்றோர்கள் ஆவேசமாக கூறுகையில், இந்த விவகாரத்தில் பெயர் அளவுக்கு 5 ஊழியர்களை கைது செய்துள்ளனர். இந்த சம்பவத்துக்கு காரணமான பள்ளி தாளாளர், முதல்வரையும் கைது செய்யவேண்டும் என்றனர்.