கரூரில் டெக்ஸ்டைல்ஸ், கொசுவலை நிறுவனங்களை விட மணல் கொள்ளை நன்றாக நடக்கிறது: விஜயகாந்த்

கரூர் மாவட்ட தேமுதிக சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா கரூர் 80 அடி சாலையில் நேற்று இரவு நடைபெற்றது. இந்த வி்ழாவில் ரூ.20 லட்சம் மதிப்பிலான மாட்டுத் தீவனம், தாதுக்கலவை, குடல்புண் நீக்கும் மாத்திரை, பால் கறவை மிஷின், புல் நறுக்கும் இயந்திரம், தீவன மாவு அரைக்கும் கிரைண்டர் போன்ற நல உதவிகளை தேமுதிக தலைவர் விஜய்காந்த் வழங்கினார்.
பின்னர் அவர் பேசியதாவது,
கரூர் நகராட்சி தலைவர், கலெக்டரிடம் எதை கேட்டாலும் அமைச்சர், அமைச்சர் என்று கூறுகிறார்களாம். நகராட்சியில் இது நாள் வரை மக்களுக்கு எந்த பணியும் செய்யவில்லை. அமைச்சர் சொல்வார் என்றால் நகராட்சி தலைவர் எதற்கு. குளித்தலை பகுதி ஆற்று வாய்க்காலில் குப்பைகள் நிறைந்துள்ளன. தூர் வாருகிறேன் எனக் கூறி மக்களின் பணத்தைத் தான் தூர் வாருகின்றனர்.
கரூர் பேருந்து நிலையம் மிகவும் குறுகலான இடத்தில் உள்ளது. இதனால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. புதிய பேருந்து நிலையத்தை கட்டுவதற்காக திமுக ஆட்சி காலத்தில் ஒரு இடம் காட்டப்பட்டு, அந்த இடத்தை சுற்றியுள்ள பகுதி எல்லாம் நன்றாக பிசினஸ் ஆனது. அதிமுக ஆட்சி வந்ததும் புதிய பேருந்து நிலையம் கட்டப்படும் என்றனர். ஆனால் எதுவும் நடக்கவில்லை. அதே நிலையில் தான் உள்ளது.
கரூரில் பஸ் பாடி, டெக்ஸ்டைல்ஸ், கொசுவலை நிறுவனங்களை விட மணல் கொள்ளை சிறப்பாக நடைபெறுகிறது. மக்களுக்கு இலவசம் வேண்டாம். வீட்டுக்கு ஒருவருக்கு வேலை கொடுங்கள். மக்களுக்கு யாராவது நல்லது செய்வார்களா என ஏங்கிக் கொண்டிருக்கிறேன். வரும் சட்டமன்றத் தேர்தலில் மக்களுக்கு நல்லது செய்கிறவர்களுடன் தான் கூட்டணி அமைப்போம்.
மக்கள் வரிப்பணத்தை கொள்ளையடிப்பவர்களை கண்டுபிடித்து கைது செய்து பணத்தை பறிமுதல் செய்து ஏழைகளுக்கு கொடுக்க வேண்டும். விரைவில் நாடாளுமன்ற தேர்தல் வருகிறது. இந்த தேர்தலில் யாராவது காசு கொடுத்து கூப்பிட்டால் சென்று விடாதீர்கள். இப்போது ஏமாந்தது போல நாடாளுமன்ற தேர்தலிலும் ஏமாந்து விடாதீர்கள். விழிப்புடன் இருங்கள் என்றார்.
இந்த விழாவில் தேமுதிக மாவட்டச் செயலாளர் என்.எஸ்.கிருஷ்ணன், முன்னாள் மாவட்ட கேப்டன் மன்ற துணை செயலாளர் கார்த்திகேயன், பெரு நகரச் செயாலாளர் பஷீர் அகமது, மாவட்ட கேப்டன் மன்ற செயலாளர் சோமூர் ரவி, மாவட்ட இளைஞர் அணி செயலாளர் சுவாதி ரவி, முன்னாள் மாநில நெசவாளர் அணி செயலாளர் வி.ஆர்.சண்முகம் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.












Click it and Unblock the Notifications