தமிழ்நாடு, மேற்கு வங்கம்.. 5 மாநில தேர்தலில் வெற்றி எந்தெந்த கட்சிக்கு? நெட்டிசன்கள் கணிப்பு இதுதான்
சென்னை: இந்தியாவே ஆவலுடன் எதிர்பார்த்துக்கொண்டிருந்த 5 மாநில சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் இன்று வெளியாகின்றன. இன்று மே 4, 2026 காலை 8 மணி முதல் வாக்கு எண்ணிக்கை தொடங்கி நடைபெறும். இந்த நிலையில், சமூக வலைதளங்களில் மக்களின் எதிர்பார்ப்பும், விவாதங்களும் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளன. தமிழ்நாட்டில் நடிகர் விஜய்யின் அரசியல் வருகை எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தப்போகிறது? திமுக பெரிய வெற்றியை பெறுமா? மேற்கு வங்கத்தில் மம்தா பானர்ஜி தனது கோட்டையைத் தக்கவைப்பாரா? அல்லது பாஜக புதிய வரலாற்றைப் படைக்குமா? என்ற எதிர்பார்ப்பு மக்களிடையே ஒருவித ஆர்வத்தையும் பதற்றத்தையும் தொற்றிக்கொள்ளச் செய்துள்ளது.

தமிழ்நாடு: திமுக கோட்டையா? விஜய்யின் வேட்டையா?
தமிழ்நாட்டைப் பொறுத்தவரை பெரும்பாலான கருத்துக்கணிப்புகள் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணிக்கு ஆதரவாகவே உள்ளன. மெட்ரைஸ் மற்றும் பீப்பிள்ஸ் பல்ஸ் போன்ற அமைப்புகள் திமுக கூட்டணி 122 முதல் 145 இடங்களைப் பிடித்து ஆட்சியைத் தக்கவைக்கும் எனக் கணித்துள்ளன. ஆனால், சமூக வலைதளங்களில் விவாதத்தைக் கிளப்பியது ஆக்சிஸ் மை இந்தியா வெளியிட்ட அதிரடி கணிப்புதான். முதன்முதலில் களம் இறங்கிய நடிகர் விஜய்யின் தமிழக வெற்றி கழகம் 98 முதல் 120 இடங்களை வாரிக் குவித்து மிகப்பெரிய ஆச்சரியத்தை அளிக்கும் என்று அந்தக் கணிப்பு கூறுகிறது. இதனால் திமுக மற்றும் தவெக ஆதரவாளர்கள் இடையே இணையதளங்களில் பெரும் போர் நடந்து வருகிறது. எனினும், திமுக ஆட்சியை பிடிக்கும் என்ற எண்ணமே சமூக வலைதளங்களில் அதிகம் உள்ளது. விஜயின் தவெக கணிசமான இடங்களை வென்றால் தொங்கு சட்டசபை வரக் கூடும் என்ற எதிர்பார்ப்பும் உள்ளது.
மேற்கு வங்கம்: மம்தா பானர்ஜிக்கு சவாலா?
மேற்கு வங்கத்தில் முன்பை விட மிகவும் கடுமையான போட்டி நிலவுகிறது. சாணக்யா ஸ்டரேட்டஜிஸ் மற்றும் பி-மார்க் போன்ற கருத்துக்கணிப்பு நிறுவனங்கள் பாஜக 146 முதல் 175 இடங்களைப் பிடித்து ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் எனக் கூறியுள்ளன. அதேசமயம், பீப்பிள்ஸ் பல்ஸ் அமைப்பு மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் 178 முதல் 187 இடங்களைப் பிடித்து மீண்டும் ஆட்சியைப் பிடிக்கும் எனக் கூறுகிறது. இந்த இழுபறி நிலையால் மேற்கு வங்க முடிவுகள் இன்று மாலை வரை திக் திக் நிமிடங்களாகவே இருக்கும் எனத் தெரிகிறது. சமூக வலைதளங்களில் திரிணாமுல் காங்கிரஸ், பாஜக இடையே வாதங்கள் நடைபெற்று வருகின்றன. எனவே, மேற்கு வங்கத்தை பொறுத்தவரை குழப்பமான நிலையே உள்ளது.
கேரளா, அசாம் மற்றும் புதுச்சேரி நிலவரம்
கேரளாவில் இந்த முறை ஆட்சி மாற்றம் ஏற்படும் என நெட்டிசன்கள் கணித்துள்ளனர். காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி 70 முதல் 75 இடங்களைப் பிடித்து முன்னிலை பெறும் என கருத்துக்கணிப்புகள் வெளியாகி இருப்பதால் அது அப்படியே நடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அசாமில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 88 முதல் 101 இடங்களைப் பிடித்து மீண்டும் ஆட்சியைப் பிடிக்கும் என உறுதியாகத் தெரிகிறது. அதேபோல் புதுச்சேரியிலும் பாஜக - என்.ஆர் காங்கிரஸ் கூட்டணி மீண்டும் ஆட்சியைத் தக்கவைக்க அதிக வாய்ப்புள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஒட்டுமொத்தமாகப் பார்க்கும்போது, பாஜக தனது செல்வாக்கை அசாம் மற்றும் புதுச்சேரியில் தக்கவைப்பதோடு, மேற்கு வங்கத்திலும் பெரிய வெற்றியை எதிர்பார்க்கிறது. அதேசமயம், தமிழ்நாடு மற்றும் மேற்கு வங்கத்தில் பிராந்திய கட்சிகள் தங்களது வலிமையை நிரூபிக்கப் போராடுகின்றன. தமிழகத்தில் நடிகர் விஜய்யின் வருகை மற்றும் கேரளாவில் காங்கிரஸ் முன்னிலை பெறுவது இந்தத் தேர்தலின் மிக முக்கியமான திருப்பங்களாகப் பார்க்கப்படுகின்றன. மாலைக்குள் முழுமையான முடிவுகள் வெளியாகிவிடும் என்பதால் இந்தியாவே தேர்தல் ஆணையத்தின் இணையதளத்தை மொய்த்து வருகிறது.












Click it and Unblock the Notifications