வயிறு எரிகிறது... நீச்சல் குளத்தில் இறந்த மாணவனின் உறவினர்கள் குமுறல்!
சென்னை: உயிர் என்பது சாதாரணமானதா. நோயினால் இறந்தாலே நாம் எவ்வளவு கஷ்டப்படுவோம். எங்கள் வயிறு எரிகிறது. பள்ளியில் கட்டணம் கட்டவில்லை என்றால் பாடாய்ப்படுத்துகின்றனர். நீச்சல் குளத்தில் எந்த பாதுகாப்பு உபகரணமும் இல்லை. பள்ளியில் கேள்வி கேட்க முடியாது. கேட்டால், டி.சி. தரட்டுமா என்று மிரட்டுவார்கள். இதனால் இது பள்ளியின் கவனக்குறைவால் நடந்தது. அதனால் நிர்வாகிகளை கைது செய்ய வேண்டும். அவர்கள் மீது கொலை வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என்று நேற்று சென்னை பத்மசேஷாத்திரி பாலபவன் சீனியர் செகண்டரி பள்ளியில் நீச்சல் குளத்தில் மூழ்கி பலியான மாணவன் ரஞ்சனின் உறவினர்கள் குமுறல் வெளியிட்டுள்ளனர்.
சென்னை பத்மசேஷாத்திரி பள்ளியில் 4ம் வகுப்பு படித்து வந்த மாணவன் ரஞ்சன் நேற்று காலை பள்ளி வளாகத்தில் உள்ள நீச்சல் குளத்தில் பயிற்சியில் ஈடுபட்டிருந்தபோது நீரில் மூழ்கி பலியானான். இந்த சம்பவம் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சி அலைகளையும் ஏற்படுத்தியுள்ளது.
பள்ளி நிர்வாகமே மாணவனின் உயிர் பறிபோக முக்கியக் காரணம் என்று பெற்றோர்கள் ஆவேசமாக குற்றம் சாட்டியுள்ளனர்.
மாணவன் ரஞ்சனின் உறவினர்கள் கூறுகையில், சம்பவம் நடந்தவுடன் பள்ளிக்குச் சென்றோம். முதலில் கீழே விழுந்து விட்டான். கையில் காயம் என்றனர். ஆனால் மாணவன் நீச்சல் குளத்தில் மூழ்கி உயிரிழந்தான் என்பதையே மறைத்து விட்டனர்.
உயிர் என்பது சாதாரணமானதா. நோயினால் இறந்தாலே நாம் எவ்வளவு கஷ்டப்படுவோம். இயக்குநர் மனோகர், எதற்குமே கலங்காதவர். கஷ்டப்பட்டு சினிமாவில் சாதித்தவர். அவர் கதறி அழுவதை எங்களால் பார்க்க முடியவில்லை. எங்கள் வயிறு எரிகிறது. பள்ளியில் கட்டணம் கட்டவில்லை என்றால் பாடாய்படுத்துகின்றனர். நீச்சல் குளத்தில் எந்த பாதுகாப்பு உபகரணமும் இல்லை. பள்ளியில் கேள்வி கேட்க முடியாது. கேட்டால், டி.சி. தரட்டுமா என்று மிரட்டுவார்கள்.
இது பள்ளியின் கவனக்குறைவால் நடந்தது. அதனால் நிர்வாகிகளை கைது செய்ய வேண்டும். அவர்கள் மீது கொலை வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என்றார்கள் அவர்கள் கோபத்துடன்.