ஏகே47 ரக துப்பாக்கிகளை சகட்டுமேனிக்கு வாங்கி வைத்துக் கொள்ளும் அமெரிக்கர்கள்!
வாஷிங்டன்: ஏ.கே.47 ரக துப்பாக்கிகள் என்றாலே நமக்கு ரசியாதான் நினைவுக்கு வரும்.. ஆனால் இப்பவெல்லாம் அமெரிக்காவில்தான் ஏ.கே.47தான் அவ்ளோ பிரபலம்...
அமெரிக்காவில் கண்மூடித்தனமான துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள் அண்மைக்காலமாக அதிகரித்திருக்கின்றன. சீக்கிய குருத்வராவில் நுழைந்து 6 பேரை மர்ம மனிதன் அண்மையில் சுட்டுக் கொன்றிருந்தார். சில நாட்களுக்கு முன்பும்கூட இப்படியொரு கண்மூடித்தனமான துப்பாக்கிச் சூட்டில் மூவர் உயிரிழந்திருந்தனர்.
இப்படி அமெரிக்காவில் நிகழ்த்தப்படுகிற கண்மூடித்தனமான துப்பாக்கிச் சூட்டு சம்பவங்களில் ஏகே47 ரக துப்பாக்கிகள் அதிகம் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன. ரசிய தயாரிப்பான ஏகே47 ரக துப்பாக்கிகளின் விலை 500 டாலர் முதல் 600 டாலர் வரை என்கிறபடியால் எப்போதும் "பாதுகாப்பற்ற" மனோநிலையில் இருக்கும் அமெரிக்கர்களுக்கு இது ஆத்மார்த்தமான நண்பனாகிவிடுகிறது.
ஏ.கே.47 துப்பாக்கிகளை தயாரிக்கும் நிறுவனம்கூட இப்படியெல்லாம் நினைத்திருக்க வாய்ப்பில்லை... அமெரிக்காவின் தனிநபர்களுக்கு கடந்த பல ஆண்டுகளாக ஏகே 47 ரக துப்பாக்கிகள் விற்பனை செய்யப்பட்டு வந்தது. ஆனால் கடந்த ஆண்டுதான் அமெரிக்கர்களுக்கான விற்பனை 50 விழுக்காடு அளவு அதிகரித்திருப்பது ரஷ்ய தயாரிப்பு நிறுவனத்தை ஆச்சரியத்தில் மூழ்க வைத்துள்ளது. ராணுவத்தினருக்கும் காவல்துறைக்கும் போய்க் கொண்டிருந்த ஏகே 47 ரக துப்பாக்கிகள் அமெரிக்கர்களின் கைகளுக்கு சர்வ சாதாரணமாக போய்க் கொண்டிருக்கிறது.
இந்நிலையில் ஏகே447 ரக துப்பாக்கிகளின் இறக்குமதிகளுக்கு ஒபாமா அரசாங்கம் தடை விதித்துவிடப் போகிறது என்று தகவல்வேறு ரெக்கை கட்டி இணையதளங்களில் உலா வருகிறது. ஆனால் அப்படியொரு திட்டம் ஒபாமா அரசாங்கத்துக்கு இல்லை என்கிறது வெள்ளை மாளிகை வட்டாரங்கள்.












Click it and Unblock the Notifications