காற்றாலைகளில் சீரான மின் உற்பத்தி இல்லை-தமிழகத்தில் அறிவிக்கப்படாத மின்தடை - மக்கள் அவதி

தமிழகத்தில் மின் தேவை தினமும் 13 ஆயிரம் மெகா வாட் உள்ள நிலையில் அதற்கேற்ற மின் உற்பத்தி இல்லாததால் கடந்த ஒரு ஆண்டுக்கும் மேலாக கடும் மின்வெட்டு நீடிக்கிறது.
தென்மேற்கு பருவ காற்று வீசியதால் நெல்லை, ஈரோடு மண்டலங்களில் உள்ள காற்றாலைகள் மூலம் கடந்த 2 மாதங்களாக 2,500 மெகா வாட் குறையாமல் மின்சாரம் உற்பத்தியானது. இதன் காரணமாக மின் வாரியத்தினர், மின் தேவையை ஒரளவுக்கு சமாளித்து வருகின்றனர்.
இந்த நிலையில் கடந்த வாரத்தில் 3 நாட்களாக 800 முதல் 900 மெகா வாட் மட்டுமே மின் உற்பத்தி ஆகி வருகிறது. இதனால் தமிழகத்தில் மீண்டும் அறிவிக்கப்படாத மின்வெட்டு அமலானது. பகலில் மட்டுமின்றி, இரவு நேரங்களிலும் மின் தடை ஏற்படுத்தி, தட்டுப்பாடு சமாளிக்கப்பட்டது.
இந்த நிலையில் கடந்த 2 நாட்களாக காற்றின் வேகம் மீண்டும் அதிகரித்துள்ளது. இதனால் மின் உற்பத்தி அளவும் படிப்படியாக உயர்ந்து வருகிறது. நேற்று நெல்லை மண்டலத்தில் 1700 மெகாவாட்டும், ஈரோடு மண்டலத்தில் 750 மெகா வாட் என்று மொத்தம் 2450 மெகா வாட் மின்சாரம் காற்றாலை மூலம் கிடைத்தது.
இன்று அதிகாலை 6 மணி நிலவரப்படி இரு மண்டலங்களிலும் சேர்ந்து மேலும் 2424 மெகா வாட் மின்சாரம் காற்றாலைகளில் உற்பத்தியானது. இதில் நெல்லை மண்டலத்தில் மட்டும் 1611 மெகா வாட் மின்சாரம் கிடைத்தது. இதனால் 3 மணி நேர இடைவிடாத தொடர் மின்தடை தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. மின் உற்பத்தி தொடரும் பட்சத்தில், மின் தட்டுபாட்டை சமாளிக்க முடியும் என்று மின் வாரியத்தினர் தெரிவித்தனர்.












Click it and Unblock the Notifications