தமிழகத்தில் குடிக்க நீரின்றி 5% கால்நடைகள் இறப்பு- முதல்வருக்கு எம்.எல்.ஏ. கடிதம்!
திருத்துறைப்பூண்டி: தமிழகத்தில் பருவ மழை பொய்த்து போனதால், வறட்சியால் விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளது. குடிக்க தண்ணீர் இல்லாமல் 5 சதவீத ஆடு, மாடுகள் இறந்துவிட்டது. 3 ஆயிரம் ஏக்கர் குறுவை சாகுபடி பாதிப்படைந்துள்ளது என்று திருத்துறைப்பூண்டி எம்.எல்.ஏ. உலகநாதன், தமிழக முதல்வருக்கு கடிதம் எழுதியுள்ளார்.
இது குறித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் திருத்துறைப்பூண்டி எம்.எல்.ஏ. உலகநாதன் அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது,
தமிழகத்தில் பருவமழை பொய்த்து போனதால் கடும் வறட்சி ஏற்பட்டுள்ளது. இதனால் விவசாயம் பொய்த்து போய்விட்டது. விவசாயிகள், விவசாயக் கூலி தொழிலாளர்கள் வாழ்வாதாரத்தை இழந்து தவித்து வருகின்றனர்.
குளங்கள், ஏரிகள் அனைத்தும் வறண்டு, நிலத்தடி நீர்மட்டம் குறைந்துவிட்டது. 25 சதவீதத்துக்கும் அதிகமான தென்னை மற்றும் பலன் தரும் மரங்கள் தண்ணீரின்றிப் பட்டு போய்விட்டது. பல இடங்களில் குடிநீர் பஞ்சம் ஏற்பட்டுள்ளது. குடிக்க தண்ணீர் இல்லாததால் 5 சதவீத ஆடு, மாடுகள் இறந்துவிட்டது. 3 ஆயிரம் ஏக்கர் குறுவை சாகுபடி பாதிப்பு அடைந்துள்ளது.
காவிரி நடுவர் மன்ற தீர்ப்புப்படி கர்நாடகா மாநிலத்திடம் இருந்து காவிரி நீரை பெற்று, டெல்டா மாவட்டங்களில் உள்ள 15 லட்சம் ஏக்கர் நிலத்தில் ஒரு போக சம்பா சாகுபடியை மேற்கொள்ள உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மத்திய அரசிடமிருந்து வறட்சி நிவாரண நிதியை பெற தமிழக அரசு வலியுறுத்த வேண்டும். பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.10 ஆயிரமும், விவசாயத் தொழிலாளர் குடும்பத்தினருக்கு தலா ரூ.10 ஆயிரமும் நிவாரணம் வழங்க வேண்டும்.
இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்டா மாவட்டங்களில் போராட்டம் நடைபெற்று வருகிறது. எனவே தமிழக சட்டசபையை முதல்வர் ஜெயலலிதா உடனடியாக கூட்டி, தமிழகத்தை வறட்சி மாநிலமாக அறிவிக்குமாறு மத்திய அரசை வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்று அந்த கடிதத்தில் தெரிவித்துள்ளார்.