காஷ்மீர் எல்லையில் இந்தியா- பாக். இடையே விடிய விடிய துப்பாக்கிச் சண்டை
ஜம்மு: ஜம்மு- காஷ்மீர் மாநிலத்தில் எல்லைப் பகுதியில் இந்தியா- பாகிஸ்தான் இடையே கடும் துப்பாக்கிச் சண்டை நடந்தது.
ஜம்மு- காஷ்மீர் மாநிலத்தின் அக்னூர் பகுதியில் நேற்று முன்தினம் இரவு 10.30 மணிக்கு பாகிஸ்தான் தரப்பிலிருந்து துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. அக்னூரை ஒட்டியுள்ள மலபேலா, கர்கால், சித்ரா முகாம் ஆகிய முகாம்கள் மீது தொடர்ச்சியாக அடுத்தடுத்து பாகிஸ்தான் படையினர் துப்பாக்கிச் சூடு நடத்தினர். அப்போது தீவிரவாதிகள் இந்திய பகுதிக்குள் ஊடுருவ முயன்றனர். இதனால் எல்லை பாதுகாப்புப் படையினர் பதில் தாக்குதல் நடத்தினர். இதில் ஊடுருவ முயன்ற ஒரு தீவிரவாதி சுட்டுக் கொல்லப்பட்டான். இதைத் தொடர்ந்து இருதரப்புக்கும் இடையே நேற்று காலை 7.30 மணி வரை கடும் துப்பாக்கிச் சண்டை நடந்தது. காஷ்மீரின் பூஞ்ச் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியிலும் பாகிஸ்தான் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளது.
இந்த ஒரு மாதத்தில் மட்டும் பாகிஸ்தான் படையினர் யுத்த நிறுத்த ஒப்பந்தத்தை 14 முறை மீறியுள்ளனர். கடந்த 17-ந் தேதி ஆர்.எஸ்.புரா பகுதியில் பாகிஸ்தான் படையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் இந்திய வீரர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டார். அதற்கு முன்பாக கடந்த 11, 13,15 ஆகிய தேதிகளிலும் பாகிஸ்தான் படையினர் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர். இந்த ஆண்டில் பாகிஸ்தான் படையினர் 37 முறை துப்பாக்கிச் சூடு நடத்தியிருக்கின்றனர்.
விடிய விடிய துப்பாக்கிச் சண்டை நடந்தாலும் ரம்ஜான் பண்டிகையையொட்டி இருநாட்டு வீரர்களும் இனிப்புகளை வழங்கி மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டது குறிப்பிடத்தக்கது.