ரூ.100 கோடி கிரானைட் கடத்தலில் சிக்கிய கொலைகார இந்திய கம்யூனிஸ்ட் எம்எல்ஏ
பெரியார் திராவிடர் கழகப் பிரமுகர் பழனிச்சாமி கொலை வழக்கில் ராமச்சந்திரன் கைது செய்யப்பட்டு சேலம் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இந் நிலையில் மதுரை மாவட்டத்தைத் தொடர்ந்து கிருஷ்ணகிரி மாவட்டத்திலும் பெருமளவில் கிரானைட் கற்கள் மோசடியாக வெட்டி எடுக்கப்பட்டு, விற்கப்பட்டு வருவது சமீபத்தில் வெளியானது.
இதையடுத்து இந்த மாவட்டத்திலும் விசாரணை நடந்து வருகிறது. இதில் கிரானைட் கடத்தலில் தளி எம்எல்ஏ ராமச்சந்திரன் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு தொடர்புள்ளது தெரியவந்துள்ளது.
6 துணை ஆட்சியர்கள், வருவாய் அதிகாரிகள், கிராம நிர்வாக அதிகாரிகள் கொண்ட குழுவினர் நடத்திய விசாரணையில் தளி தொகுதியில் ரூ.100 கோடிக்கும் அதிகமான மதிப்புள்ள கிரானைட் கற்கள் அனுமதியின்றி வெட்டி எடுக்கப்பட்டுள்ளது கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து நாகமங்கலம் கிராமத்தில் கிரானைட் கற்களை வெட்டிக் கடத்திய எம்.எல்.ஏ. ராமச்சந்திரன், அவரது அண்ணன் வரதராஜன், மனைவி விமலா உள்ளிட்ட 11 பேர் மீது உத்தனப்பள்ளி காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
அதே போல சந்தனப்பள்ளி கிராமத்தில் அரசுக்குச் சொந்தமான விலை உயர்ந்த கறுப்பு கிரானைட் கற்களை அனுமதியின்றி திருடிச் சென்றதாக தேன்கனிக்கோட்டை காவல் நிலையத்திலும் தளி எம்.எல்.ஏ. டி.ராமச்சந்திரன் மற்றும் அவரது உறவினர்கள் மீது இன்னொரு வழக்கும் பதிவாகியுள்ளது.
அதே போல இருதுகோட்டையில் கறுப்பு கிரானைட் கற்களை திருடியதாக எம்எல்ஏ டி.ராமச்சந்திரன், அவரது அண்ணன் வரதராஜன், மனைவி விமலா ஆகியோர் மீது தேன்கனிக்கோட்டை காவல் நிலையத்திலும் இன்னொரு வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது.
கொலை வழக்கில் சேலம் மத்திய சிறையில் உள்ள எம்எல்ஏ ராமச்சந்திரன் ஜாமீனில் வெளியே வந்தால் கிரானைட் முறைகேட்டில் கைதாவார் என்று தெரிகிறது.
இந்தக் கொலைகார, திருட்டு எம்எல்ஏவை இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் தா.பாண்டியன் இன்னும் விட்டுக் கொடுக்காமல் ஆதரித்து வருவது குறிப்பிடத்தக்கது.
டிவி ஊழியரை தாக்கி கேமரா உடைப்பு-3 கல் குவாரி ஊழியர்கள் கைது:
இந் நிலையில் சென்னை தாம்பரம் அருகே திருநீர்மலையில் உள்ள ஒரு கல்குவாரியை புதிய தலைமுறை தொலைக்காட்சி கேமரா மேன் எர்னஸ்ட் ராஜன் படம் பிடித்துக் கொண்டிருந்தார். நிருபர் மகாலிங்கம் செய்தி சேகரித்துக் கொண்டிருந்தார்.
அப்போது கல்குவாரி ஊழியர்கள் இருவரையும் தாக்கியதோடு வீடியோ கேமராவையும் உடைத்தனர். இதுகுறித்து சங்கர் நகர் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப் பதிவு செய்து குவாரி ஊழியர்கள் சசிதரன் (26), மாரியப்பன் (26), ரூபன் (25) ஆகிய 3 பேரை கைது செய்துள்ளனர்.