கூட்டம் சேர்க்க பிரியாணி, குவாட்டருடன் 100 ரூபாயும் கொடுக்கிறார்கள்: விஜய்காந்த்
திருப்பூர்: நான் மக்களை 30 நாளும் தேடி வருகிறேன். ஆனால், மற்ற கட்சியினர் தேர்தல் நேரத்தில் மட்டும்தான் தேடி வருகிறார்கள். அவர்கள் கூட்டம் சேர்க்க பிரியாணி, குவாட்டருடன் ரூ.100 கொடுக்கிறார்கள் என்று தேமுதிக தலைவர் விஜய்காந்த் கூறினார்.
திருப்பூரில் தொழிலாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா மற்றும் தேமுதிக பொதுக் கூட்டத்தில் பேசிய விஜய்காந்த்,
எனக்கு யார் மீதும் காழ்ப்புணர்ச்சி கிடையாது. தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையால் தாக்கப்பட்டு வருகிறார்கள். இதை தடுக்க ஜெயலலிதாவும், கருணாநிதியும் கடிதம் எழுதுகிறார்கள்.
மீனவர்கள் பிரச்சனையில் அனைத்து கட்சிகளும் ஒன்று சேர்ந்து போராட வேண்டும். யார் தலைமையில் வேண்டுமானாலும் அணி திரளட்டும். அதில் தேமுதிக கட்டாயம் பங்குபெறும். நான் அவர்கள் பின்னால் தொண்டர்களுடன் வருவேன்.
திருப்பூரின் சாய கழிவு நீரை கடலில் கொண்டு போய் சேர்க்க ரூ.2,000 கோடி வேண்டும். அரசிடம் கேட்டால் அவ்வளவு தொகை இல்லை என்கிறார்கள். ஆனால் ஈமு கோழி மோசடி, கிரானைட் மோசடி என்று பல ஆயிரம் கோடி ரூபாய் மோசடி நடக்கிறது. அந்த பணத்தில் திட்டத்தை நிறைவேற்றலாம்.
கட்டுமான பொருட்கள் விலை உயர்ந்து விட்டது என்று என்ஜினீயர்கள் உண்ணாவிரதம் இருக்கிறார்கள். கேரளாவில் ஒரு பிடி மண் அள்ளக் கூட தடை உள்ளது. ஆனால் தமிழகத்தில் இருந்து லாரி, லாரியாக மணல் வாளையாறு வழியாக கேரளாவுக்கு கொண்டு செல்கிறார்கள்.
நான் மக்களை 30 நாளும் தேடி வருகிறேன். அவர்கள் தேர்தல் நேரத்தில் மட்டும்தான் தேடி வருகிறார்கள். அவர்கள் கூட்டம் சேர்க்க பிரியாணி, குவாட்டருடன் ரூ.100 கொடுக்கிறார்கள். ஆனால் இங்கு கூடியுள்ள கூட்டம் உண்மையான தொண்டர்கள் கூட்டம்.
முதல்வர் ஜெயலலிதா நான், எனது அரசு என்று கூறுகிறார். இந்த ஆணவம் அழிவைத் தரும் என்று அவர் தலைவரே பாடியுள்ளார் என்பதை மறந்து விடக்கூடாது. அனைத்திலும் ஊழல் மலிந்து விட்டது. வளர்ச்சி திட்டங்களில் கமிஷன் 20 சதவீதம் உயர்ந்துள்ளது என்றார் விஜய்காந்த்.