ஹைகோர்ட் தீர்ப்பை எதிர்பார்த்து காத்திருக்கும் கூடங்குளம்
நெல்லை: கூடங்குளம் அணு மின் நிலையம் தொடர்பான வழக்கு உயர் நீதிமன்றத்தில் உள்ளதால் தீர்ப்பு வெளியான பிறகே எரிபொருள் நிரப்பும் பணி தொடங்கும் என தெரிகிறது.
நெல்லை மாவட்டம் கூடங்குளத்தில் ரஷ்யா-இந்தியா கூட்டு முயற்சியில் ரூ.13, 500 கோடி மதிப்பீட்டில் 1000 மெகாவாட் உற்பத்தி திறனுள்ள தலா இரண்டு அணு உலைகள் அமைக்கப்பட்டுள்ளன. முதல் அணு உலையின் மூலம் கடந்த டிசம்பர் மாதமே மின் உற்பத்தியை தொடங்க இந்திய அணுசக்தி கழகம் தி்ட்டமிட்டிருந்தது. ஆனால் அப்பகுதி மக்கள் கடும் போராட்டம் நடத்தியதன் காரணமாக அணு மின் நிலைய பணிகள் 6 மாதம் நிறுத்தப்பட்டன. இதைத் தொடர்ந்து கடந்த மார்ச் மாதம் 19ம் தேதி மீண்டும் தொடங்கப்பட்ட பணிகள் இரவு பகலாக நடந்தன. முதல் அணு உலையி்ன் அழுத்த கலன் திறக்கப்பட்டு அதில் இருந்த மாதிரி எரிபொருள் அகற்றப்பட்டது. இதைத் தொடர்ந்து முதல் அணு உலையில் எரிபொருள் நிரப்ப அனுமதி கேட்டு இந்திய அணு சக்தி ஒழுங்குமுறை வாரியத்திடம் கூடங்குளம் அணு மின் நிலையம் விண்ணப்பம் அளித்தது.
இதன் அடிப்படையில் இந்திய அணு சக்தி ஒழுங்குமுறை வாரிய அதிகாரிகள் கூடங்குளம் அணு மின் நிலையத்திற்கு வந்து ஆய்வு செய்து கடந்த 10ம் தேதி எரிபொருள் நிரப்ப அனுமதி அளித்தனர். ஆனால் அணு மின் நிலையத்தை எதிர்த்து போராடுபவர்கள் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு நிலுவையில் இருப்பதால் அணு உலையில் எரிபொருள் நிரப்ப முடியவில்லை. இந்நிலையில் கூடங்குளம் அணு மின் நிலையம் தொடர்பான வழக்கில் வருகிற 29ம் தேதி தீர்ப்பு அளிக்கப்படும் என்று உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் கடுமையான மின்பற்றாக்குறை நிலவி வருகிறது. இரவு, பகல் என நாள் ஒன்றுக்கு 12 மணிநேரம் மின்தடை அமலில் உள்ளது. கூடங்குளத்தில் இந்த மாத இறுதியில் உற்பத்தி தொடங்கினால் மின்வெட்டில் இருந்து ஓரளவு தப்பிக்க முடியும் என பொதுமக்கள் கருதினர். ஆனால் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளதால் அதன் தீர்ப்பு வெளியான பின்னரே முதல் அணு உலையில் எரிபொருள் நிரப்புவது தொடர்பாக கூடங்குளம் அணு மின் நிலையம் முடிவு எடுக்க முடியும். எனவே நீதிமன்ற தீர்ப்பை எதிர்பார்த்து அதிகாரிகள் காத்திருக்கின்றனர்.