இதே வேலையா....பாஜகவை விடாதீங்க...கடுமையா பதிலடி கொடுக்கனும்: காங்கிரசாருக்கு சோனியா உத்தரவு
டெல்லி: நாடாளுமன்றத்தை முடக்கி வைத்து பாரதிய ஜனதா கட்சி பிளாக் மெயில் அரசியல் செய்கிறது என்று காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி கடுமையாகத் தாக்கியுள்ளார்.
காங்கிரஸ் கட்சி எம்.பிக்களிடையே சோனியா காந்தி பேசியதாவது:
நிலக்கரி சுரங்க விவகாரத்தில் பிரதமர் மன்மோகன்சிங்கை கட்சியின் எம்.பிக்கள். முழுமையாக ஆதரிக்க வேண்டும். புகார் கூறும் பாஜகவினருக்கு கடுமையான பதிலடி கொடுக்க வேண்டும்.
பிரதமர் மன்மோகன்சிங் மீது கூறப்படும் புகார் உள்நோக்கம் கொண்டது. இது தொடர்பாக விரிவான அறிக்கையை பிரதமர் தாக்கல் செய்திருக்கிறார். அந்த அறிக்கையானது பாஜகவின் பொய் பிரச்சாரத்தை தவிடுபொடியாக்கியிருக்கிறது.
ஒவ்வொரு கணக்குத் தணிக்கை அறிக்கை வெளியாகும்போது இதே பிரச்சனைதான். எத்தனை முறை நாம் விவாதத்துக்கு தயராக இருந்தோம்.? ஆனால் பாஜகவினர் அப்படியில்லை. நாடாளுமன்ற நடவடிக்கைகளை சீர்குலைக்க விடக் கூடாது என்றார்.
இக்கூட்டத்துக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் மணீஷ் திவாரி, முதலைக் கண்ணீர் வடிக்கும் பாஜகவுக்கு எதிராக வீதிகளில் இறங்கி காங்கிரஸ் தொண்டர்கள் போராடுவர் என்றார்.