கிரானைட் மோசடி: துரை தயாநிதியின் பாஸ்போர்ட் முடக்கப்படவில்லை- மு.க.அழகிரி
மேலும், துரை தயாநிதி தாக்கல் செய்துள்ள முன் ஜாமீன் மனு மீதான விசாரணை முடிவடையும் வரை அவரைக் கைது செய்யக் கூடாது என்றும் மதுரை கிளை நீதிமன்றம் உத்தரவிட்டதாகவும் அழகிரி கூறியுள்ளார்.
கிரானைட் கொள்ளை தொடர்பாக துரை தயாநிதிக்கு போலீஸார் தீவிர வலை வீசியுள்ளனர். ஆனால், அவர் தலைமறைவாக உள்ளார். துரை தயாநிதி வேறு நாட்டிற்குத் தப்பிச் செல்லாவண்ணம் குடியேற்ற அதிகாரிகள் பார்த்துக் கொள்ள வேண்டும் என்றும் போலீஸார் கோரியுள்ளனர்.
இந் நிலையில் துரை தயாநிதியின் பாஸ்போர்ட் முடக்கப்பட்டுவிட்டதாக தகவல் வெளியானது. இதை அழகிரி மறுத்துள்ளார்.
பிஆர்பி அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை:
இந் நிலையில் கைது செய்யப்பட்ட பிஆர்பி கிரானைட் அதிபர் பழனிச்சாமியின் பி.ஆர்.பி. கிரானைட் நிறுவனத்தின் மேலூர் அருகே தெற்குத் தெரு அலுவலகத்தின் கீழ் உள்ள சுரங்க அறையில் கட்டுக் கட்டாக பணம் இருப்பதாக தகவல்கள் வெளியானதையடுத்து அந்த அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீஸார் இன்று காலை முதல் சோதனை நடத்தி வருகின்றனர்.