'கோத்தகிரியில் குடிநீர் பஞ்சம்': கருணாநிதி மீது மேலும் ஒரு அவதூறு வழக்கு
சென்னை: திமுக தலைவர் கருணாநிதி மீது தமிழக அரசு மேலும் ஒரு அவதூறு வழக்கு தாக்கல் செய்துள்ளது.
கோத்தகிரியில் குடிநீர் பஞ்சம் என்ற தலைப்பில் முரசொலி கேள்வி- பதிலில் கருணாநிதி கருத்து தெரிவித்திருந்தார். கடந்த 4ம் தேதி இந்த செய்தி வெளியாகி இருந்தது.
இந் நிலையில் 'கோத்தகிரியில் குடிநீர் பஞ்சம்' என்ற தலைப்பில், தமிழ்நாடு அரசுக்கும் முதல்வர் ஜெயலலிதாவின் பெயருக்கும் களங்கம் ஏற்படுத்தும் வகையில் அந்த செய்தி அமைந்திருந்ததாக, சென்னை நகர அரசு வழக்கறிஞர் ஜெகன் அவதூறு வழக்கு தொடர்ந்துள்ளார்.
அவர் தாக்கல் செய்துள்ள மனுவில், அவதூறானா கருத்து தெரிவித்த கருணாநிதியையும் அதை வெளியிட்ட முரசொலி செல்வத்தையும் அவதூறு சட்டத்தின் கீழ் தண்டிக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.
கருணாநிதி மீதான வழக்கு விசாரணைக்கு தடை!
இந் நிலையில் இதற்கு முன் கருணாநிதி மீது முதல்வர் ஜெயலலிதா தொடர்ந்த அவதூறு வழக்கு விசாரணைக்கு சென்னை உயர் நீதிமன்றம் இடைக் கால தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.
கருணாநிதி, முரசொலி பத்திரிகை ஆசிரியர் செல்வம் ஆகியோர் மீது முதல்வர் ஜெயலலிதா, சென்னை அமர்வு நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், கருணாநிதி உள்பட வழக்கில் சம்பந்தப்பட்ட அனைவரும் நேரில் ஆஜராக வேண்டும் என்று கூறி சம்மன் அனுப்பியது.
இந் நிலையில், நீதிமன்றம் அனுப்பிய சம்மனுக்கு தடை விதிக்கக் கோரி முரசொலி பத்திரிகை ஆசிரியர் செல்வம் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தார். இந்த மனுவை இன்று விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், திமுக தலைவர் கருணாநிதி மீதான அவதூறு வழக்கை விசாரிக்க இடைக் கால தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.












Click it and Unblock the Notifications