உர விலையை உயர்த்தும் பைலில் நான் கையெழுத்திடவில்லை: அழகிரி
ராசிபுரம்: உர விலையை உயர்த்த மத்திய அரசு தீவிரம் காட்டினாலும், அதற்கான கோப்பில் நான் கையெழுத்திடவில்லை என்று திமுக தென் மண்டல அமைப்புச் செயலரும், மத்திய ரசாயனம் மற்றும் உரத் துறை அமைச்சருமான மு.க. அழகிரி கூறியுள்ளார்.
நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் நடந்த விழாவில் அழகிரி பேசுகையில், நாட்டில் உர விலை உயர்ந்துள்ளது எனத் தவறான செய்திகள் வெளிவருகின்றன. உரங்கள் பெரும்பாலும் வெளிநாட்டில் இருந்துதான் இறக்குமதி செய்யப்படுகின்றன.
வெளிநாட்டு நிறுவனங்கள் அங்குள்ள நிலவரங்களுக்கு ஏற்றவாறு உர விலையை உயர்த்தி அனுப்புகின்றன. இதனால், ஒரு சில உர ரகங்கள் மட்டும் விலை உயர்ந்துள்ளன.
மற்ற ரகங்களுக்கும் விலையை உயர்த்த மத்திய அரசு அக்கறை காட்டுகிறது. ஆனால், அதற்கான கோப்பில் நான் கையெழுத்திடவில்லை.
தூத்துக்குடி உரத்தொழிற்சாலை, 1997ம் ஆண்டு மூடப்பட்டது. நான் அமைச்சராக பொறுப்பேற்ற பின், மீண்டும் இயங்குவதற்கு முயற்சி மேற்கொள்ளப்பட்டு, ஒன்றரை ஆண்டுகளாக, நல்ல முறையில் இயங்கி வருகிறது.
கேரள மாநிலம், கொச்சி பகுதியில் செயல்பட்டு வந்த ரசாயனம் மற்றும் உர நிறுவனம் நஷ்டத்தில் இயங்கி வந்தது. மத்திய அமைச்சராக நான் பொறுப்பேற்ற பின்னர் லாபத்துக்கு கொண்டு வந்து, தற்போது அந்த நிறுவன ஊழியர்களுக்கு சம்பள உயர்வு அளிக்கப்பட்டுள்ளது.
பெட்ரோலிய ரசாயனம் மற்றும் பெட்ரோ ரசாயன தொழில் முதலீட்டு மண்டலங்கள் அமைக்க, மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. அதை, தமிழகத்தில் அமைக்க வேண்டும் என்பதற்காக, கடலூரில் இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. அதற்கான பூர்வாங்க பணிகள், 2013ல் துவங்குகிறது. இந்த தொழில் மண்டலம் துவங்கும் பட்சத்தில், 8 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். அதற்கு, அக்டோபர் அல்லது நவம்பரில் அடிக்கல் நாட்டு விழா நடத்துவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்றார் அழகிரி.