டீசல் விலை உயர்வு, அன்னிய முதலீட்டுக்கு அனுமதிக்கு எதிர்ப்பு: செப்.20-ந் தேதி பாரத் பந்த்
என்.டி.ஏ. போராட்டம்
பாரதிய ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியின் கூட்டம் டெல்லியில் அத்வானி வீட்டில் நடைபெற்றது. இக்கூட்டத்தில். டீசல் விலை உயர்வை கண்டித்தும், சில்லரை வணிகத்தில் அன்னிய நேரடி முதலீட்டை அனுமதித்த மத்திய அரசுக்கு எதிராகவும் 20-ந் தேதி முழுஅடைப்பு போராட்டம் நடத்துவது என்று முடிவு செய்யப்பட்டது.
எதிர்க்கட்சிகளும் 20-ல் போராட்டம்
இந்த போராட்டத்துக்கு மத்திய அரசுக்கு வெளியில் இருந்து ஆதரவு அளித்து வரும் சமாஜ்வாதி கட்சியின் தலைவர் முலாயம் சிங், மதசார்பற்ற ஜனதாதளம் கட்சியின் தலைவர் தேவேகவுடா மற்றும் பிஜு ஜனதாதள தலைவர் நவீன் பட்நாயக், தெலுங்கு தேசம் தலைவர் சந்திரபாபு நாயுடு, இடதுசாரி கட்சி தலைவர்களான பிரகாஷ் கரத் (மார்க்சிஸ்ட்), சுதாகர் ரெட்டி (இந்திய கம்யூனிஸ்ட்), தேவபிரத பிஸ்வாஸ் (பார்வர்டு பிளாக்), டி.ஜே.சந்திரசூடன் (புரட்சி சோசலிஸ்டு) ஆகியோர் சார்பில் வெளியிடப்பட கூட்டறிக்கையில், சில்லரை வணிகத்தில் அன்னிய நேரடி முதலீட்டை அனுமதித்ததை கண்டித்து 20-ந் தேதி போராட்டத்துக்கு அழைப்பு விடுத்து உள்ளனர்.
வணிகர் சங்கங்கள்
இதேபோல், தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை தலைவர் த.வெள்ளையன், தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கைகளில் அகில இந்திய வணிகர் சம்மேளனத்தின் முடிவின் அடிப்படையில் 20-ந் தேத் நாடு தழுவிய கடையடைப்புப் போராட்டம் நடத்தப்படும் என்று அறிவித்துள்ளனர்.