திருப்பதி கோவிலுக்கு 2 புதிய குதிரைகள் : தொழில் அதிபர் எம்.ஏ.எம்.ராமசாமி காணிக்கை
திருமலை: திருமலை வெங்கடேசப் பெருமாளுக்கு இரண்டு குதிரைகளை தொழில் அதிபர் எம்.ஏ.எம்.ராமசாமி காணிக்கையாக வழங்கினார். சனிக்கிழமையன்று நடைபெற்ற சிறப்பு பூஜைக்குப் பின்னர் தேவஸ்தான நிர்வாகத்திடம் குதிரைகளை ஒப்படைத்தார்.
செட்டிநாடு குழும நிறுவனங்களின் தலைவரும் பிரபல தொழில் அதிபர் எம்.ஏ.எம்.ராமசாமி, சென்னை குதிரைப்பந்தய சங்க செயலாளராகவும் இருந்து வருகிறார் அவரிடம், ஏராளமான குதிரைகள் உள்ளன.
திருமலையில் உள்ள வெங்கடேசப் பெருமாளின் தீவிர பக்தரான எம்.ஏ.எம்.ராமசாமி, சனிக்கிழயன்று இரவு திருப்பதிக்கு சென்றார் அங்கிருந்து திருமலைக்கு சென்ற அவரை, திருமலை-திருப்பதி தேவஸ்தானத்தின் பிரதான வாசலில் அதிகாரிகள் வரவேற்றனர். அதைத்தொடர்ந்து எம்.ஏ.எம்.ராமசாமி 2 பெண் குதிரைகளை தேவஸ்தானத்திற்கு காணிக்கையாக வழங்கினார். அவற்றை தேவஸ்தான துணை அதிகாரி சீனிவாசராஜூ பெற்றுக்கொண்டார்.
எம்.ஏ.எம்.ராமசாமி காணிக்கையாக வழங்கியுள்ள குதிரைகளுக்கு ஸ்ரீதேவி, பூதேவி என்று பெயரிடப்பட்டு இருக்கிறது. இதனையடுத்து சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. திருமலை கோவிலுக்கு எம்.ஏ.எம்.ராமசாமி, ஏற்கனவே 5 குதிரைகளை காணிக்கையாக வழங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
திருமலை-திருப்பதி தேவஸ்தானத்தில், ஏற்கனவே 9 குதிரைகள் உள்ளன. தற்போது கிடைக்கப் பெற்றுள்ள 2 குதிரைகளையும் சேர்த்து, தற்போது மொத்தம் 11 குதிரைகள் உள்ளன. இந்த குதிரைகள், திருமலையில் நடக்கும் திருவிழா காலங்களில் நன்கு அலங்கரிக்கப்பட்டு, சாமி ஊர்வலத்தின் முன்பு அணிவகுத்து செல்லும் என்று தேவாஸ்தான துணை அதிகாரி சீனிவாசராஜூ தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications