இந்துக்கள் புனித யாத்திரை மானியம்: பயனாளிகளுக்கான விதிமுறைகள் என்னென்ன?
சென்னை: முஸ்லீம்கள் புனித யாத்திரை செல்வது போல, இந்துக்களும் சீனாவில் உள்ள மானசரோவர் மற்றும் நேபாளத்தில் உள்ள முக்தி நாத் ஆகிய இடங்களுக்கு புனித யாத்திரை சென்று வர பயனாளிகளுக்கு மானியம் வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்தது. இத்திட்டத்திற்கான விதிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளது.
முஸ்லிம்கள் மெக்கா செல்வதற்கு மானியம் வழங்கப்படுவது போல, சீனாவில் உள்ள மானசரோவர், நேபாளத்தில் உள்ள முக்திநாத் ஆகிய இடங்களுக்கு புனித யாத்திரை செல்லும் இந்துக்களுக்கு மானியம் வழங்கப்படும் என்று தமிழக அரசு பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது.
இந்த திட்டத்தை உடனடியாக செயல்படுத்துவதற்கான பணிகளில் அதிகாரிகள் ஈடுபட்டனர். இதற்காக முதல்வர் ஜெயலலிதா உத்தரவின் பேரில், பயனாளிகளுக்கான விதிமுறைகளை அதிகாரிகள் ஏற்படுத்தி உள்ளனர்.
இது குறித்து இந்து சமய அறநிலையத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
தமிழ்நாடு இந்து சமய அறநிலையத்துறை சார்பில் சீனாவில் உள்ள மானசரோவர் மற்றும் நேபாளத்தில் உள்ள முக்திநாத் ஆகிய இடங்களுக்கு புனித யாத்திரை மேற்கொண்டு வந்த பின்பு, தமிழகத்தை சேர்ந்த இந்துக்களுக்கு மானியம் வழங்கும் திட்டம், கீழ்க்கண்ட நிபந்தனைகள் மற்றும் விதிமுறைகளுக்கு உட்பட்ட பக்தர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
சீனாவில் உள்ள மானசரோவர் யாத்திரைக்கு மத்திய அரசின் வெளியுறவுத்துறையிடம் விண்ணப்பித்து, தேர்வு செய்யப்பட்டு, யாத்திரையை முழுமையாக நிறைவு செய்த தமிழகத்தை சேர்ந்த இந்து மதத்தை சேர்ந்த 250 பக்தர்களுக்கு ஆண்டுதோறும் மானியம் வழங்கப்படும். யாத்திரை முடித்த ஒரு மாதத்திற்குள் மானியம் கோரி, இந்து சமய அறநிலையத்துறைக்கு யாத்திரை மேற்கொண்டதற்கான உரிய சான்றிதழ்களுடன் விண்ணப்பிக்க வேண்டும்.
250 விண்ணப்பங்களுக்கு மேல் பெறப்பட்டால், இந்து சமய அறநிலையத்துறையால் பொருளாதார அடிப்படையில் பயனாளிகள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். மானியத்திற்கான விண்ணப்பங்கள் இந்து சமய அறநிலையத்துறையால் ஆய்வு செய்யப்பட்டு, 250 பக்தர்களுக்கு தலா ரூ.40 ஆயிரம் மானியம் வழங்கப்படும். பக்தர்கள் மானியம் பெறுவதற்கான அதிகபட்ச வருமான வரம்பு ஏதும் இல்லை. பயனாளி தனது ஆயுட்காலத்தில் ஒருமுறை மட்டுமே மானியம் பெற தகுதியுடையவர் ஆவார்.
நேபாளத்தில் உள்ள முக்திநாத்துக்கு யாத்திரை போய்விட்டு வரும் விண்ணப்பதாரர் தமிழகத்தை சேர்ந்த இந்து மதத்தை சார்ந்தவராக இருக்க வேண்டும். அதற்காக தாசில்தாரிடம் சான்று பெற வேண்டும். விண்ணப்பதாரர் 18 வயதுக்கு மேற்பட்டவராகவும், 70 வயதுக்குட்பட்டவராகவும் இருக்க வேண்டும்.
புனித யாத்திரைக்கான முழு செலவினத்தையும் பக்தரே ஏற்று யாத்திரைக்கு செல்ல வேண்டும். யாத்திரை முடித்ததற்கு ஆதாரமாக பயணச்சீட்டு, வருமான சான்று, இருப்பிட சான்று, 3 புகைப்படங்கள், பயணத்திட்ட நகல் சான்று ஆகியவற்றுடன் இந்து சமய அறநிலையத்துறை ஆணையருக்கு அரசு மானியம் வேண்டி யாத்திரையை முடித்த ஒரு மாதத்திற்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
மானியத்திற்கான விண்ணப்பங்கள் இந்து சமய அறநிலையத்துறையால் ஆய்வு செய்யப்பட்டு, 250 பக்தர்களுக்கு தலா ரூ.10 ஆயிரம் மானியம் அளிக்கப்படும். 250 விண்ணப்பங்களுக்கு மேல் வந்துவிட்டால், இந்து சமய அறநிலையத்துறையால் கணினி குலுக்கல் முறை மூலம் பயனாளிகள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
பக்தர்கள் மானியம் பெறுவதற்கான உயர்ந்தபட்ச வருமான வரம்பு ஏதும் இல்லை. பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். பயனாளி தனது ஆயுட்காலத்தில் ஒருமுறை மட்டுமே மானியம் பெற முடியும். மேற்கண்ட மானியம் கோரும் விண்ணப்பதாரர்கள் அதற்குரிய விண்ணப்பத்தினை இந்து சமய அறநிலையத்துறையின் இணையதளமான www.tnhrce.org மூலம் பதிவிறக்கம் செய்து, அதனை பூர்த்தி செய்து அனுப்ப வேண்டும் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications