அண்ணன் மருமகளைக் கொன்ற ஓய்வு பெற்ற பிடிஓ உள்பட 2 பேருக்கு ஆயுள்
நெல்லை: நெல்லையில் அண்ணன் மருமகளைக் கொன்ற ஓய்வு பெற்ற வட்டார வளர்ச்சி அதிகாரி உள்பட 2 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நெல்லை மாவட்டம் மேலக்கடையநல்லூர் கரியமாணிக்க பெருமாள் கோயில் தெருவைச் சேர்ந்தவர் வெங்கடாச்சலம். அவரது மனைவி செல்லம்மாள். அவர்கள் மகன் சுப்பிரமணியன் சென்னையில் வீடியோகிராபராக உள்ளார். அவருக்கும் டெல்லி மதுராவைச் சேர்ந்த பிருந்தா என்பவருக்கும் கடந்த 2007ம் ஆண்டில் திருமணம் நடந்து ஒரு பெண் குழந்தையும் உள்ளது. சுப்பிரமணியன் சென்னையில் பணியாற்றி வந்தார்.
கடந்த 22.3.2009 தேதியன்று வெங்கடாச்சலம் சிகிச்சைக்காக தென்காசி சென்றுவிட்டார். அப்போது வீட்டில் செல்லம்மாளும், பிருந்தாவும் இருந்துள்ளனர். மறுநாள் காலையில் பிருந்தா வீட்டின் பின்புறம் மண்ணெண்ணெய் ஊற்றி எரிக்கப்பட்ட நிலையில் பிணமாகக் கிடந்தார். இது குறித்து வெங்கடாச்சலம் அளித்த புகாரின்பேரில் கடையநல்லூர் போலீசார் விசாரணை நடத்தினர். அதில் பிருந்தா பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்டிருப்பது தெரிய வந்தது. போலீசார் விசாரணையில் வெங்கடாச்சலத்தின் தம்பி வைத்தியநாதன் என்பவரும், அவரது உறவினர் பெங்களூர் ஸ்ரீராமபுரத்தைச் சேர்ந்த வெங்கட்ராமன் என்பவரும பிருந்தாவை கொலை செய்தது தெரிய வந்தது.
போலீசார் இருவரையும் கைது செய்தனர். வெங்கட்ராமன் ஓய்வு பெற்ற வட்டார வளர்ச்சி அதிகாரி ஆவார். இந்த வழக்கு நெல்லை மகளிர் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி தேவசகாயம் இருவருக்கும் ஆயுள் தண்டனையும், தலா ரூ.25,000 அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.












Click it and Unblock the Notifications