காவிரி விவகாரத்தில் கர்நாடக வக்கீல்கள் சரியாக வாதிடவில்லை- எதிர்க்கட்சிகள் சரமாரி புகார்
பெங்களூர்: காவிரி நதிநீர் விவகாரம் தொடர்பான உச்சநீதிமன்ற வழக்கு விசாரணையின் போது கர்நாடக அரசு தரப்பினர் சரியா வாதிடவில்லை என்று எதிர்க்கட்சிகள் சரமாரியாக புகார் கூறியுள்ளனர். ஆனால் அரசுத் தரப்பு இதை நிராகரித்திருக்கிறது.
கர்நாடக மாநில சட்டப்பேரவையின் எதிர்க்கட்சித் தலைவரான சித்தராமையா கூறியுள்ளதாவது:
உச்சநீதிமன்றத்தில் காவிரி நதிநீர் வழக்கு விசாரணைக்கு வந்தபோது கர்நாடக அரசுத் தரப்பு சரியாக வாதிடவில்லை. கர்நாடக அரசுத் தரப்பு தாக்கல் செய்த பதில் மனு திருப்தி அளிக்கக் கூடியதாக இல்லை. காவிரி வடிகால் பகுதி பற்றிய உண்மையை நிலையை எடுத்துரைத்து உச்சநீதிமன்றத்தை கர்நாடக அரசு தரப்பு சமாதானப்படுத்தவில்லை.பிரதமர் தலைமையிலான காவிரி நதிநீர் ஆணையத்தின் உத்தரவுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்படவில்லை என்றார்.
இதேபோல் காங்கிரஸ் மூத்த தலைவர் எஸ்.ஆர். பட்டீல் கூறுகையில், காவிரி நீரைத் தேக்கி வைத்து அணைகளின் உண்மையான இருப்பை உச்சநீதிமன்றத்துக்கு கர்நாடக அரசு தெரிவிக்கவில்லை. தற்போதைய கையிருப்பு நீர் கர்நாடகத்தின் குடிநீர் தேவைக்கும் வேளாண் பணிக்கும் போதுமானதாக இல்லை என்பதை உச்சநீதிமன்றத்துக்கு தெரியப்படுத்தியிருக்க வேண்டும் என்றார்.
ஆனால் இதை கர்நாடக அரசின் சட்ட வல்லுநர்கள் நிராகரித்துள்ளனர். 'சட்டப்படிதான் அனைவரும் செயல்பட முடியும். மக்களின் உணர்ச்சிகளை அரசியல்வாதிகள் தூண்டிவிடுகின்றனர். கிருஷ்ணா அல்லது காவிரி நீர் பிரசனை எதுவானாலும் எங்களது யோசனையை அரசுகளுக்கு சொல்வோம். அரசு ஏற்காவிட்டால் வேறு ஒருவரை நியமித்துக் கொள்ளலாம் என்றனர் அவர்கள்.