காவிரி நீர் விவகாரம்: ஓசூரிலிருந்து கர்நாடகத்துக்கு பேருந்துகள் இயக்கப்படுவது நிறுத்தம்
காவிரியில் தமிழகத்துக்கு தண்ணீர் திறந்துவிடக் கூடாது என்பதை வலியுறுத்தி கன்னட அமைப்புகள் கடந்த சில நாட்களாகத் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன. கன்னட அமைப்புகளின் இந்தப் போராட்டத்தில் சத்தியமங்கலத்தை அடுத்த பண்ணாரியில் கர்நாடகம் செல்லும் தமிழகப் பதிவு எண்களைக் கொண்ட வாகனங்களும் பேருந்துகளும் நிறுத்தப்பட்டன.
இந்நிலையில் காவிரி நீரை தமிழகத்துக்கு திறந்துவிடுவது குறித்து கர்நாடக மாநில அனைத்துக் கட்சிகளின் கூட்டம் நேற்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் தமிழகத்துக்கு தண்ணீர் திறந்துவிட வேண்டும் என்ற உச்சநீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மறுஆய்வு மனுத்தாக்கல் செய்ய முடிவு எடுக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.
ஆனால் அனைத்துக் கட்சிக் கூட்டத்துக்குப் பின்னர் திடீரென ஆளுநர் பரத்வாஜை கர்நாடக முதல்வர் ஜெகதீஷ் ஷெட்டர் சந்தித்துப் பேசினார். இதைத் தொடர்ந்து நேற்று நள்ளிரவு முதல் காவிரியில் தமிழகத்துக்கு நீர் திறந்துவிடப்பட்டு வருகிறது.
இதைத் தொடர்ந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இன்று ஓசூரிலிருந்து கர்நாடகம் செல்லும் அனைத்து தமிழக பேருந்துகளும் திடீரென நிறுத்தி வைக்கப்பட்டன. இதனால் பயணிகள் பெரும் அவதிக்குள்ளாகினர். கர்நாடக மாநிலத்தில் இயல்பு நிலைமை திரும்பியதும் பேருந்துகள் இயக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் தமிழக- கர்நாடக எல்லையான ஓசூரில் பதற்றம் நிலவி வருவதால் 2 ஆயிரத்துக்கும் அதிகமான போலீசார் அங்கு குவிக்கப்பட்டும் உள்ளனர்.