நான் லஞ்சம் வாங்கினேன் என்று யாரையாவது சொல்லச் சொல்லுங்கள் பார்க்கலாம்.. ப.சி. சவால்
பிபிசி தொலைக்காட்சிக்கு ப.சிதம்பரம் பேட்டி அளித்துள்ளார். அதில் அவர் பல்வேறு கேள்விகளுக்குப் பதிலளித்தார். ப.சிதம்பரம் தனது பேட்டியில் கூறுகையில், வங்கித்துறை, இன்சூரன்ஸ் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் மேலும் பல சீர்திருத்தங்கள் வரப் போகின்றன. இப்படிப்பட்ட நடவடிக்கைகள் மூலம் நாட்டின் பொருளாதார வளர்ச்சி 9 சதவீதத்தை மீண்டும் எட்டும் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது.
சில அடிப்படை முரண்பாடுகளை, குழப்பங்களை நாங்கள் நீக்கும் முயற்சிகளில் தீவிரமாக உள்ளோம். எனவே எனக்கு நம்பிக்கை உள்ளது என்றார் ப.சிதம்பரம்.
பின்னர் பிபிசி செய்தியாளர் ப.சிதம்பரத்திடம், பெரும்பாலான அமைச்சர்கள் லஞ்சம் வாங்குவதாக மக்களிடையே கருத்து உள்ளது. நீங்கள் எந்த சந்தர்ப்பத்திலாவது அப்படி வாங்கியுள்ளீர்களா அல்லது வாங்கத தூண்டியுள்ளீர்களா என்று கேட்டபோது, சீரியஸானார் ப.சிதம்பரம்.
அதற்கு அவர் பதிலளிக்கையில், இந்தியாவிலோ அல்லது உலகத்தில் வேறு எந்த பகுதியிலேயோ உள்ள ஒரு நபரை என் முன் கொண்டு வந்து நிறுத்தி அவரை, இவருக்கு ஒரு ரூபாயாவது லஞ்சம் கொடுத்தேன் என்று என்னை பார்த்து சொல்லச் சொல்லுங்கள் பார்க்கலாம் என்றார். பின்னர் தொடர்ந்து, பெரும்பாலான அமைச்சர்கள் லஞ்சம் வாங்குகிறார்கள் என்ற கருத்தே முட்டாள்தனமானது என்றார் சிதம்பரம்.