அதிமுக இளைஞர், இளம் பெண்கள் பாசறை கூட்டங்களை எப்படித் தொடங்கணும் தெரியுமா?
இதுதொடர்பாக கட்சிப் பொதுச் செயலாளர் முதல்வர் ஜெயலலிதாவின் ஒப்புதலுடன் வெளியிடப்பட்டுள்ள கட்சித் தலைமைக் கழக அறிக்கை:
அதிமுக இளைஞர் பாசறை, இளம் பெண்கள் பாசறை சார்பில் நடைபெறும் ஒவ்வொரு நிகழ்ச்சியின் போதும், அதிமுக இளைஞர் பாசறை, இளம் பெண்கள் பாசறைகளை சேர்ந்த செயல்வீரர்கள், வீராங்கனைகள் அனைவரும் கீழ்க்கண்ட உறுதிமொழியை எடுத்துக்கொண்ட பின்னர் நிகழ்ச்சிகளை தொடங்க வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழக நிரந்தர பொதுச்செயலாளர், தமிழ்நாடு அரசின் மாட்சிமை பொருந்திய முதல்வர், லட்சியம், தொண்டு, தியாகம் ஆகியவற்றின் மொத்த உருவமாகத் திகழும் இதய தெய்வம் தங்கத்தாரகை புரட்சி தலைவியின் சீரிய சிந்தனையில் உதித்த அதிமுக இளைஞர் பாசறை, இளம் பெண்கள் பாசறையில் எங்களை உளப்பூர்வமாக இணைத்து கொண்டு, அர்ப்பணிப்பு உணர்வுடனும், அஞ்சாத உறுதியுடனும், ஆளுமை திறனோடும் கழக பணியாற்றுவோம்.
அதிமுகவின் கொள்கைகளையும், கட்டுப்பாடுகளையும் பின்பற்றி கழக மாண்புகளை பேணி காத்து, அதிமுகவின் வளர்ச்சிக்கு உணர்வோடும், உத்வேகத்தோடும் தொடர்ந்து உழைப்போம். புரட்சித் தலைவி மீது மாறாத பற்றோடும், விசுவாசத்தோடும் திகழ்ந்து, அதிமுக இளைஞர் பாசறை, இளம் பெண்கள் பாசறையின் போர் வீரர்களாக, வீராங்கனைகளாக லட்சிய வேட்கையோடு மக்கள் பணி ஆற்றுவோம்.
தந்தை பெரியார், அண்ணா, எம்.ஜி.ஆர். ஆகியோரின் மொத்த வடிவமாக திகழும், புரட்சி தலைவியின் கொள்கைகளை எந்நாளும் காப்போம், பாசறையின் பணிகளுக்கு எங்களை முழு மனதோடு அர்ப்பணிக்கிறோம். நாங்கள் எத்தகைய தியாகத்திற்கும் தயார், தயார் என உளமாற உறுதி கூறுகிறோம் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.