வத்ரா விவகாரம்: 'அசோக் கெம்கா தான் டிரான்ஸ்பர் கேட்டார்'- சொல்கிறது ஹரியானா அரசு
சண்டிகர்: சோனியா காந்தி மருமகன் ராபர்ட் வத்ராவுக்கும் டி.எல்.எப். நிறுவனத்துக்கும் இடையேயான நில விற்பனை தொடர்பாக விசாரணை நடத்த உத்தரவிட்ட அசோக் கெம்கா தாமாகவே பணியிட மாற்றம் கோரினார் என்று அம்மாநில அரசு விளக்கம் அளித்திருக்கிறது.
சோனியா காந்தியின் மருமகன் ராபர்ட் வத்ராவின் நில ஆர்ஜித முறைகேடுகளை விசாரணை நடத்த உத்தரவிட்ட நிலையில் அசோக் கெம்கா பணியிட மாற்றம் செய்யப்பட்டார். தாம் பழிவாங்கப்பட்டதாக கெம்கா கூறிவந்தார். ஆனால் ஹரியானா மாநில அரசோ இதனை தற்போது மறுத்துள்ளது. கெம்கா தாமாகவே விரும்பி இடமாற்றம் கோரினார் என்று கூறியுள்ளது. ஆனால் ஹரியானா அரசின் இந்தக் கருத்தை அவர் நிராகரித்திருக்கிறார்.
ஹரியானாவின் சகாயம் ஐ.ஏ.எஸ்
தமிழகத்தில் நேர்மையன ஐ.ஏ.எஸ். அதிகாரியாக அறியப்பட்டவர் சகாயம். இவர்தான் தமிழகத்தை உலுக்கிய பல்லாயிரம் கோடி கிரானைட் கொள்ளையை அம்பலப்படுத்தியவர். இவர் தமது பணிக்காலத்தில் நேர்மையாக இருந்தார் என்ற ஒரே காரணத்துக்காக தொடர்ந்து பல இடங்களுக்கும் டிரான்ஸ்பர் செய்யப்பட்டார்.
இத்தோடு 43வது வாட்டியாக டிரான்ஸ்பர்
இதேபோல்தான் அசோக் கெம்காவும் தமது பணிக்காலத்தில் நேர்மையாக செயல்பட்டார் என்ற காரணத்துக்காகவே பல இடங்களுக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டிருக்கிறார். 1993 ஆம் ஆண்டு முதல் இதுவரை மொத்தம் 19 ஆண்டுகளில் 43 முறை பணியிட மாற்றம் செய்யப்பட்டிருக்கிறார். இந்தக் காலகட்டத்தில் பல்வேறு துறைகளில் மொத்தம் 8 பதவிகளை வகித்திருக்கிறார். இந்த 43 பணிமாற்றங்களில் 12 முறை நில ஆர்ஜித விவகாரத்துக்காகவே டிரான்ஸ்பர் செய்யப்பட்டவர் கெம்கா.