’தொடர் மின்வெட்டு’ ஏன்?: நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி பதிலளிக்க மின்வாரிய பொறியாளருக்கு நோட்டீஸ்
மதுரை: தமிழகத்தில் தொடர் மின்வெட்டு அமலில் இருப்பது ஏன் என்பது குறித்து தமிழக மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத் தலைமை பொறியாளர் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
மதுரையைச் சேர்ந்த முத்துக்குமார் என்பவர் இது தொடர்பாக வழக்கு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார். இம்மனுவில் தொடர் மின்வெட்டால் மக்கள் சந்திக்கும் பிரச்சனைகளை விவரித்திருந்தார்.
இம்மனுவை விசாரித்த நீதிபதி ஆர்.சுதாகர், மின்வெட்டு குறித்து பொதுமக்களுக்கு நாளிதழ்கள் மூலம் முன்கூட்டியே அறிவிப்பு கொடுக்காதது ஏன் என்பது குறித்தும், தமிழகத்தின் மின் நிலைமை குறித்தும் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் தலைமை பொறியாளர் இன்று நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க உத்தரவிட்டார்.
இதேபோல் தமிழக தொழில்வர்த்தக சபையும் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரவும் முடிவு செய்திருக்கிறது.