அசாமில் மீண்டும் மதக் கலவரம்.. 6 பேர் பலி
குவஹாத்தி: அசாமில் மீண்டும் கலவரம் வெடித்ததில் பலியானோர் எண்ணிக்கை 6க உயர்ந்துள்ளது. இதையடு்த்து பிரதமர் மன்மோகன் சிங் அசாம் முதல்வர் தருண் கோகாய்க்கு போன் செய்து சட்டம் ஒழுங்கு குறித்து பேசியுள்ளார்.
அசாம் மாநிலத்தில் போடோ பழங்குடியினருக்கும், வங்கதேசத்தில் இருந்து வநத முஸ்லிம்களுக்கும் இடையே கடந்த ஜூலை மாதம் கலவரம் ஏற்பட்டது. சுமார் 2 மாதங்கள் நீடித்த இந்த கலவரத்தில் 99 பேர் பலியாகினர், 4.80 லட்சம் பேர் வீடுகளை இழந்து முகாம்களில் தஞ்சம் புகுந்தனர். ராணுவம் வரவழைக்கப்பட்டு கலவரம் அடக்கப்பட்டது.
இந்நிலையில் கடந்த வாரம் அசாமில் அதுவும் ஜூலை மாத கலவரத்தின்போது பெரிதும் பாதிக்கப்பட்ட கோக்ரஜாரில் மீண்டும் கலவரம் வெடித்ததில் 2 பேர் பலியாகினர். கடந்த சில நாட்களாக நடந்த கலவரத்தில் பலியானோர் எண்ணிக்கை 6க உயர்ந்துள்ளது. இதையடுத்து கோக்ரஜார் நகரில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
கலவரத்தை கட்டுப்படுத்த ராணுவம் வரவழைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பிரதமர் மன்மோகன் சிங் அசாம் முதல்வர் தருண் கோகாய்க்கு நேற்று இரவு போன் செய்து மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு குறித்து கேட்டறிந்தார். சில சக்திகள் அமைதி மற்றும் பாதுகாப்பை சீர்குழைக்கும் நோக்கத்துடன் செயல்பட்டு வருகின்றன என்றும், அவர்களின் திட்டங்களை முறியடிக்கத் தேவையான நடவடிக்கைகளை அரசு எடுக்கும் என்றும் பிரதமர் உறுதியளித்துள்ளார்.
இதற்கிடையே சட்டம் ஒழுங்கு குறித்து விவாதிக்க சிறப்பு கூட்டம் ஒன்றை கோகாய் நேற்று இரவு கூட்டினார். அப்போது கலவரத்தை இரும்புக் கரம் கொண்டு அடக்குமாறு அவர் டிஜிபி மற்றும் போலீஸ் உயர் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.












Click it and Unblock the Notifications