சில்லறை வர்த்தகத்தில் அன்னிய முதலீடு: பார்லி.யில் தீர்மானம் கொண்டுவர தே.ஜ. கூட்டணி முடிவு!
டெல்லி: நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடரில் மத்திய அரசின் சில்லறை வர்த்தகத்தில் அன்னிய முதலீட்டுக்கான அனுமதியை எதிர்த்து தீர்மானம் கொண்டுவர பாரதிய ஜனதா கட்சி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி முடிவு செய்திருக்கிறது. மேலும் மத்திய அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவருவதற்கான வகுப்புகளை ஆராயவும் தேசிய ஜனநாயகக் கூட்டணி திட்டமிட்டிருக்கிறது.
திரிணாமுல் முயற்சி- மார்க்சிஸ் நிராகரிப்பு
மத்திய அரசுக்கு எதிராக நம்பிக்கை இல்லாத தீர்மானத்தை கொண்டுவர திரிணாமுல் காங்கிரஸ் திட்டமிட்டிருக்கிறது. இந்தத் தீர்மானத்தை மார்க்சிஸ்ட் கட்சி ஆதரிக்க வேண்டும் என்று திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மமதா கேட்டுப்பார்த்தார். ஆனால் முடியாது என்று மார்க்சிஸ்ட் கட்சி அறிவித்துவிட்டது.
பாஜகவும் நிராகரிப்பு
இந்நிலையில் இது தொடர்பாக இன்று காலை பாரதிய ஜனதா கட்சியின் நாடாளுமன்ற செயற்குழுக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. இந்தக் கூட்டத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தீர்மானத்தை பாஜக ஆதரிக்க வேண்டாம் என்று முடிவு செய்யப்பட்டது.
தேசிய ஜனநாயகக் கூட்டணி கூட்டம்
இதனைத் தொடர்ந்து இன்று மாலை பாரதிய ஜனதா கட்சி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியின் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் சில்லறை வர்த்தகத்தில் அன்னிய முதலீட்டுக்கான அனுமதியை எதிர்த்து நாடாளுமன்றத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் தீர்மானம் கொண்டுவரத் தீர்மானிக்கப்பட்டது.இந்த தீர்மானத்தை அனைத்து கட்சிகளும் ஆதரிக்க வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுக்கப்பட்டிருக்கிறது.
மேலும் மத்திய அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லாத தீர்மானத்தைக் கொண்டுவருவதற்கான நிலைமைகள் தொடர்பாக ஆராயவும் முடிவு செய்யப்பட்டிருக்கிறது. திரிணாமுல் காங்கிரஸ் கட்சி, நாடாளுமன்றத்தில் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவந்தால் அதை ஆதரிப்பது குறித்து பின்னர் முடிவு செய்யப்படும் என்றும் பாஜக அறிவித்திருக்கிறது.












Click it and Unblock the Notifications