துபாய், லண்டன், நியூயார்க் இந்திய தூதரகங்களில் விரைவில் சிபிஐக்கு தனி அதிகாரிகள்!

இந்தியர்கள், இந்தியா தொடர்புடைய ஊழல்கள், கிரிமினல் வழக்குகளில் இந்த நாடுகளில் இருந்து ஏராளமான தகவல்கள் சிபிஐக்குத் தேவைப்படுகின்றன. ஆனால், இதை தூதரகங்களில் உள்ள வெளியுறவுத்துறை அதிகாரிகளால் பெற முடியவில்லை. இதனால், இந்த நாடுகளில் தனக்குத் தேவையான தொடர்பு அதிகாரிகளை சிபிஐயே நேரடியாக நியமிக்கவுள்ளது. இவர்கள் தூதரகங்களில் இருந்த வண்ணம் சிபிஐக்காக பணியாற்றுவர்.
2ஜி, ராணுவத்துக்கு வாகனங்கள் வாங்கியதில் நடந்த டட்ரா ஊழல், ஏர்செல்-மேக்சிஸ் விவகாரம், சத்யம் கம்ப்யூட்டர் ஊழல், அபிஷேக் வர்மாவின் ஆயுத பேர ஊழல் உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் துபாய், அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகளிடம் இருந்து விளக்கங்கள் கோரி இந்திய நீதிமன்றங்கள், ரா, ஐபி, சிபிஐ, போலீசார், மத்திய அரசு ஆகிய அமைப்புகள் அனுப்பிய கடிதங்களுக்கு இன்னமும் பதில் கிடைக்கவில்லை.
கிட்டத்தட்ட 250 இந்திய கோரிக்கைகளுக்கு பதில் கிடைக்கவில்லை. இதனால், இந்த வழக்குகளும் விசாரணைகளும் அப்படியே தேங்கி வருகின்றன. இந் நிலையில் தான் தனக்கென தனி அதிகாரிகளை நியமித்து, அந் நாட்டு புலனாய்வு அமைப்புகளுடன் நேரடியாகப் பேசி விவரங்களை வாங்க சிபிஐ கருதுகிறது.
இதற்காகவே, இந்த தொடர்பு அதிகாரிகள் நியமிக்கப்படவுள்ளனர். இந்த நியமனங்களுக்கு துபாய், அமெரிக்கா, இங்கிலாந்து ஆகிய நாடுகள் ஒப்புதல் அளித்துவிட்டன. இதையடுத்து டிஐஜி பதவிக்குரிய அதிகாரத்தில் இந்த அதிகாரிகள் நியமிக்கப்படவுள்ளனர்.
அதே போல இந்தியாவில் நடந்த ஊழல்களில் ஐசில் ஆப் மேன் தீவுகள், மொரீசியஸ், மலேசியா, தென் ஆப்பிரிக்கா ஆகிய நாடுகளிடம் இருந்தும் சிபிஐக்கு ஏராளமான தகவல்கள் தேவைப்படுவது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications