சிவகாசி தீ விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு தலா 1 லட்சம்: மாதா அமிர்தானந்தாமயி நிதி உதவி
கொல்லம்: மாதா அமிர்தானந்தாமயி பிறந்த நாளை ஒட்டி 25 கோடி ருபாய்க்கு நிதி உதவியும், 59 ஜோடிகளுக்கு இலவச திருமணமும் நடத்திவைக்கப்பட்டது. சிவகாசி தீவிபத்தில் பலியானோர் குடும்பங்களுக்கு தலா ஒரு லட்சம் ரூபாயும் காயமடைந்தவர்களுக்கு தலா 50000 ரூபாயும் நிதி உதவி வழங்கப்பட்டது.
மாதா அமிர்தானந்தமயியின் 59-வது பிறந்த நாள் விழா, கேரள மாநிலம் கொல்லம் மாவட்டத்தில் உள்ள அமிர்தபுரியில் வியாழக்கிழமை கொண்டாடப்பட்டது.
அமிர்தானந்தமயி மடத்தின் துணைத் தலைவர் சுவாமி அமிர்தசொரூபானந்தாபுரி, மாதா அமிர்தானந்தமயிக்கு பாத பூஜை நடத்தினார். இதன்பின்னர் விழாவில் பல்வேறு நிதி உதவிகள் வழங்கப்பட்டன.
சிவகாசி தீ விபத்து
சிவகாசி முதலிப்பட்டி பட்டாசு ஆலை விபத்தில் இறந்தவர்களின் குடும்பத்தாருக்கு தலா ரூ.1 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.50 ஆயிரமும் வழங்கப்பட்டது. இந்த நிதியுதவி வழங்கும் திட்டத்தை கேரள எரிசக்தி மற்றும் போக்குவரத்து துறை அமைச்சர் ஆர்யதன் முகமது தொடங்கி வைத்தார்.
சிவகாசி பட்டாசு ஆலை விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு நிவாரண நிதியை, தமிழக எம்எல்ஏ-க்கள் தங்கதமிழ்ச்செல்வன், ஆர்.எம்.பழனிசாமி ஆகியோரிடம் வழங்கினர்.
கண்ணூர் தீ விபத்தில் இறந்தவர்களுக்கான நிவாரண நிதியை, கேரள மாநில காங்கிரஸ் தலைவர் ரமேஷ் சென்னிதாலா வழங்கினார்.
இலசவ வீடுகள்
கேரளத்தில் வீடுகள் இல்லாத ஏழைகளுக்கு 500 இலவச வீடுகள் கட்டும் திட்டத்தை, மத்திய உணவுத் துறை அமைச்சர் கே.வி.தாமஸ் தொடங்கி வைத்தார். ஏற்கெனவே, இத்திட்டத்தில் நாடு முழுவதும் 45,000 இலவச வீடுகள் கட்டப்பட்டுள்ளன.
இலவச அறுவை சிகிச்சை
மாதா அமிர்தானந்தமயியின் பிறந்த நாளையொட்டி, கொச்சியில் உள்ள அமிர்தா மருத்துவமனையில் 200 இலவச இதய அறுவைச் சிகிச்சைகள், 50 இலவச சிறுநீரக மாற்று அறுவைச் சிகிச்சைகள் மேற்கொள்ளும் திட்டத்தை சத்தீஸ்கர் மாநில ஆளுநர் சேகர் தத் தொடங்கி வைத்தார்.
இலவச திருமணங்கள்
சுமார் ரூ.25 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியைத் தொடர்ந்து, கேரள மாநில முதல்வர் உம்மன் சாண்டி அனுப்பிய பிறந்த நாள் வாழ்த்துச் செய்தி வாசிக்கப்பட்டது. நிறைவாக 59 ஏழை ஜோடிகளுக்கு திருமணத்தை மாதா அமிர்தானந்தமயி நடத்தி வைத்தார். பின்னர் அவர் பக்தர்களுக்கு அருளாசி வழங்கினார்.
ஏற்கனவே சிவகாசி பட்டாசு விபத்தில் பலியானோரின் குடும்பங்களுக்கு மலையாள நடிகர் மம்முட்டியும் பெருமளவில் மருந்துப் பொருட்களை வழங்கி உதவிக் கரம் நீட்டியிருந்தார் என்பது நினைவிருக்கலாம். தற்போது கேரளாவைச் சேர்ந்த அமிர்தானந்த மயியும் உதவியுள்ளார். ஆனால் தமிழகத்து நடிகர்களோ, நடிகையரோ அல்லது அமிர்தானந்த மயி போன்ற ஆன்மீகவாதிகளோ எந்த உதவியையும் இந்த நொடி வரைக்கும் தரவில்லை, கண்டு கொள்ளவே இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications