காவிரி.. 15 வருடத்திற்குப் பிறகு முதல் முறையாக மீண்டும் பேசும் தமிழகம், கர்நாடகம்
சென்னை: காவிரிப் பிரச்சினையில் 15 வருடங்களுக்குப் பிறகு தமிழகம் மற்றும் கர்நாடகம் இடையே மீண்டும் பேச்சுவார்த்தை நடைபெறவுள்ளது. இதனால் இரு மாநில விவசாயிகள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
1890ல் முதல் பேச்சு
வெள்ளைக்காரன் ஆட்சிக்காலத்தில், மைசூர் சமஸ்தானமாகவும், மெட்ராஸ் ராஜதானியாகவும், தமிழகம் மற்றும் கர்நாடகம் பிரிந்து கிடந்த வேளையில்தான் காவிரிப் பிரச்சினை முதல் முறையாக பெரிதாக வெடித்தது. அப்போது 1890ம் ஆண்டு இரு தரப்பையும் அழைத்து வெள்ளைக்கார அரசாங்கம் பேச்சுவார்த்தை நடத்தியது. அதுதான் காவிரிப் பிரச்சினையில் நடந்த முதல் அதிகாரப்பூர்வ பேச்சுவார்த்தையாகும்.
முதல் பேச்சுவார்த்தையின் முடிவு என்ன?
மைசூரில் நடந்த இந்தப் பேச்சுவார்த்தையின்போது மைசூர் சமஸ்தானம் காவிரி நீர் உபயோகம் குறித்து சுதந்திரமாக முடிவெடுக்க அனுமதி வழங்கப்பட்டது. அதேசமயம், மெட்ராஸ் ராஜதானியின் தேவைகளையும் மைசூர் சமஸ்தானம் புறக்கணிக்காமல் பாதுகாக்க வேண்டும் என்றும் நிபந்தனை விதிக்கப்பட்டது. இதற்கு மைசூரும் ஒப்புக் கொள்ளவே ஒரு ஒப்பந்தம் கையெழுத்தானது. ஆனால் இந்த ஒப்பந்தம் 1892ம் ஆண்டுதான் கையெழுத்தானது.
மைசூர் ஒப்பந்தத்தை ஏற்காத கர்நாடகா
நாடு சுதந்திரமடைந்த பின்னர் கர்நாடகம் என புதிய மாநிலமாக மைசூர் மாறிய பின்னர், 1892ம் ஆண்டு போடப்பட்ட ஒப்பந்தம் நியாயமற்றது என்று கூறி கர்நாடக அரசு இந்த ஒப்பந்தத்தை ஏற்க மறுத்து விட்டது.
விஸ்வேஸ்வரய்யா கொண்டு வந்த அணைத் திட்டம்
1910ம் ஆண்டு காவிரி நீர்ப் பிரச்சினையில் அப்போது மைசூர் சமஸ்தானத்தின் தலைமைப் பொறியாளராக இருந்த விஸ்வேஸ்வரய்யாவும், மைசூர் மகாராஜாவாக அப்போது இருந்த நல்வாடி கிருஷ்ணராஜ உடையாரும் புதிய திட்டத்தை அறிவித்தனர். அதாவது கண்ணம்பாடி என்ற இடத்தில் ஒரு பெரிய அணையைக் கட்டுவது என்பதே அத்திட்டம். அதற்கு மெட்ராஸ் ராஜதானி கடும் எதிர்ப்பு தெரிவித்தது. அனுமதியும தர மறுத்தது. அதேசமயம், மேட்டூரில் காவிரி நீரைத் தேக்க அணை கட்டப்படும் என மெட்ராஸ் அறிவித்தது.
முதல் முறையாக வந்த வக்காலத்து
இருப்பினும் வெள்ளைக்கார அரசு மைசூர் புதிய அணை கட்ட அனுமதி அளித்தது. இருப்பினும் 11 டிஎம்சி நீரை மட்டுமே தேக்கக் கூடிய வகையில் அணை கட்ட அனுமதி கொடுத்தது. ஆனால் அதை மீறி கூடுதலாக நீரை தேக்கும் வகையிலான பிரமாண்ட அணையைக் கட்டியது மைசூர். இதையடுத்து மெட்ராஸ் ராஜதானி கடும் எதிர்ப்புக் கிளப்பவே, இந்த விவகாரத்தை ஒரு மத்தியஸ்த அமைப்புக்கு விட்டது வெள்ளையர் அரசு. இப்படித்தான் காவிரிப் பிரச்சினை முதல் முறையாக ஒரு மத்தியஸ்த அமைப்புக்குப் போனது.
மத்தியஸ்தம் செய்ய வந்த கிரிப்பின்
மைசூர் மற்றும் மெட்ராஸ் அரசுகளுக்கு இடையே சமரசம் ஏற்படுத்தவும் தீர்வு காணவும் சர் கிரிப்பின் மற்றும் நெதர்சோல் ஆகிய இரு வெள்ளைக்கார அதிகாரிகள் நியமிக்கப்பட்டனர். அவர்கள் 1913ம் ஆண்டு பேச்சுவார்த்தையை நடத்தினர். இதன் இறுதியில் 1914 மே 12ம் தேதி ஒரு ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டது.
நியாயமாக நடந்த வெள்ளையர் அரசு
இந்த ஒப்பந்தத்தின்படி ஏற்கனவே இந்திய அரசு அதாவது வெள்ளையர் அரசு அறிவித்ததன்படி, மைசூர் சமஸ்தானம் 11 டிஎம்சி நீருக்கு மேல் அணையில் நீர் தேக்கக் கூடாது என்று அறிவிக்கப்பட்டது. மேலும், தனது விவசாய நீர்ப்பாசனப் பகுதியின் அளவையும் மைசூர் அதிகரிக்கக் கூடாது என்றும் நிபந்தனை விதிக்கப்பட்டது. ஆனால் மெட்ராஸ் ராஜதானி அரசுக்கு இதில் உடன்பாடு இல்லை. எனவே அது அப்பீல் செய்தது.
அடுத்தடுத்து வந்த ஒப்பந்தங்கள்
இதையடுத்து நடந்த பேச்சுவார்த்தைகளின் இறுதியில் 1924ம் ஆண்டு ஒரு ஒப்பந்தம் உருவானது. அதேபோல 1929, 1933 ஆகிய ஆண்டுகளிலும் ஒப்பந்தங்கள் திருத்தப்பட்டன. இப்படித்தான் இன்று வரை காவிரிப் பிரச்சினை தொடர்பான ஒப்பந்தங்களும், பேச்சுவார்த்தைகளும் நீடித்தபடி உள்ளன.
26 முறை பேச்சுவார்த்தை
தமிழகத்திற்கும், கர்நாடகத்திற்கும் இடையே காவிரிப் பிரச்சினை தொடர்பாக 1968 முதல் 1990 வரை மொத்தம் 26 முறை பேச்சுவார்த்தைகள் நடைபெற்றுள்ளன. இதில் 21 முறை மத்திய நீர்வளத்துறை அமைச்சர் உடன் இருந்தார். 5 முறை இரு மாநில முதல்வர்கள் மட்டும் சந்தித்துப் பேசியுள்ளனர்.
கருணாநிதி - ஜே.எச்.படேல் பேச்சுவார்த்தை
தமிழ்நாடு மற்றும் கர்நாடகம் இடையே கடைசியாக 1997ம் ஆண்டு பேச்சுவார்த்தை நடைபெற்றது. சென்னையில் ஜனவரி 5ம் தேதி இந்தப் பேச்சுவார்த்தை நடைபெற்றது. சென்னையில் நடந்த இந்தப் பேச்சுவார்த்தையில் தமிழக முதல்வர் கருணாநிதியும், கர்நாடக முதல்வர் ஜே.எச்.படேலும் கலந்து கொண்டனர். சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டதன் பேரிலேயே இந்த சந்திப்பும், பேச்சுவார்த்தையும் நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. இந்தப் பேச்சுவார்த்தையில் ஒரு உடன்பாடும் ஏற்படவில்லை. இதையடுத்து மீண்டும் நடுவர் மன்றத்தை அணுக இரு மாநில அரசுகளும் முடிவெடுத்தன.
ஜெயலலிதாவின் முதல் பேச்சு
ஜெயலலிதா 1991ம் ஆண்டு முதல்வராக முதல் முறையாகப் பொறுப்பேற்ற பின்னர் அந்த ஆண்டு டிசம்பர் மாதம் நடந்த பேச்சுவார்த்தையில் பங்கேற்றார். காவிரிப் பிரச்சினையில் அவர் கலந்து கொண்ட முதல் பேச்சுவார்த்தை இதுதான். அக்கூட்டத்தில் தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா மற்றும் புதுச்சேரி முதல்வர்கள் பங்கேற்றனர். பிரதமர் வாஜ்பாய் தலைமை தாங்கினார். இதிலும் எந்த முடிவும் எட்டப்படவில்லை.
1996ல் 2வது முறையாக பங்கேற்ற ஜெயலலிதா
1996ம் ஆண்டும் மீண்டும் பிரச்சினை வெடித்தது. அப்போது பிரதமராக இருந்தவர் நரசிம்ம ராவ். இந்தப் பேச்சுவார்த்தையிலும் ஜெயலலிதா கலந்து கொண்டார். இது அவரது 2வது சந்திப்பாகும். இந்தப் பேச்சுவார்த்தையின்போது கர்நாடக முதல்வராக இருந்த தேவெ கெளடாவுக்கும், அவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் மூண்டது. பேச்சுவார்த்தையும் தோல்வியடைந்தது.
15 ஆண்டுக்குப் பின் மீண்டும்!
தற்போது 15 ஆண்டு இடைவெளிக்குப் பின்னர் மீண்டும் இரு மாநில முதல்வர்கள் சந்தித்துப் பேசவுள்ளனர். தமிழக முதல்வர் ஜெயலலிதாவும், கர்நாடக முதல்வர் ஜெகதீஷ் ஷெட்டரும் சந்தித்துப் பேசவுள்ளனர்.