எப்டிஐக்கு ஆதரவாக கருணாநிதி.. நாடார் சமுதாயத்துக்கு வலைவீசும் ஜெயலலிதா!
தமிழகத்தின் வணிகர்கள் ஒட்டுமொத்தமாக சில்லறை வர்த்தகத்தில் அன்னிய முதலீடு திட்டத்தை எதிர்த்து வருகின்றனர். இதற்காக ஸ்டிரைக் உள்ளிட்டவற்றிலும் அவர்கள் ஈடுபட்டனர். திமுக தலைவர் கருணாநிதியும் வணிகர்களுக்கு ஆதரவான நிலைப்பாட்டில்தான் இருந்து வந்தார்.
இருப்பினும் தற்போது பாஜகவை காரணம் காட்டி, நாடாளுமன்றத்தில் இந்த விவகாரம் தொடர்பாக வாக்கெடுப்பு நடத்தப்பட்டால் ஐக்கிய முற்போக்குக் கூட்டணிக்கு ஆதரவாகவே செயல்படுவோம் என்று கருணாநிதி கூறி விட்டார். இதனால் வணிகர் சமுதாயத்தினர், குறிப்பாக நாடார் சமுதாயத்தினர் கருணாநிதியின் முடிவு குறித்து அதிருப்தி அடைந்துள்ளனர்.
இந்த நிலையில் முதல்வர் ஜெயலலிதா இன்று நாடார் சமுதாயத் தலைவர்களை சந்தித்தார்.
சிபிஎஸ்இ பள்ளிகளில் 9-ம் வகுப்பு சமூக அறிவியல் பாடப் புத்தகத்தில் நாடார் சமூகத்தை பற்றிய சர்ச்சைக்குரிய கருத்துகள் இடம் பெற்றுள்ளதை நீக்க வேண்டும் என்று கூறி சமீபத்தில் பிரதமருக்கு முதல்வர் ஜெயலலிதா கடிதம் எழுதியிருந்தார்.
அதில், தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தால் வெளியிடப்பட்டுள்ள சி.பி.எஸ்.இ. 9-ம் வகுப்பு சமூக அறிவியல் பாடத்தில் நாடார் சமூகத்தினரை இழிவுப்படுத்தும் பல கருத்துக்கள் இடம் பெற்றுள்ளதைச் சுட்டிக்காட்டி, அந்தத் தகவல்கள் தவறானவை என்றும், நாடார் சமூகத்தினர், கன்னியாகுமரி மாவட்டத்தின் பூர்வீக குடிமக்கள் என்றும், அவர்கள் தென்னிந்தியாவில் ஒரு கால கட்டத்தில் ஆட்சியாளராக இருந்துள்ளனர் என்றும், சமூக மற்றும் பொருளாதார வளர்ச்சியில் நாடார்களின் பங்கு மகத்தானவை.
கடின உழைப்பு மற்றும் மனஉறுதியால் கல்வி மற்றும் வியாபாரத் துறையில் அவர்கள் பெரும் வெற்றி பெற்றுள்ளனர் என்றும், இப்படிப்பட்ட பெருமை வாய்ந்த நாடார் சமூகத்தினர் பற்றி சி.பி.எஸ்.இ. 9-ம் வகுப்பு சமூகப் பாடத்தில் சர்ச்சைக்குரிய கருத்துக்கள் நாடார் சமூகத்தை பற்றி மாணவ மாணவியரிடையே தவறான கருத்தினை ஏற்படுத்திவிடும் என்பதால், சர்ச்சைக்குரிய அப்பாடத்தை, 9-ம் வகுப்பு சமூக அறிவியல், புத்தகத்திலிருந்து உடனடியாக நீக்க சம்பந்தப்பட்ட அமைச்சகத்துக்கு அறிவுறுத்த வேண்டும் என பிரதமரை கேட்டுக் கொண்டிருந்தார்.
இதற்காக முதல்வருக்கு நன்றி தெரிவிப்பதற்காக முதல்வரை நாடார் சமுதாயத் தலைவர்கள் இன்று சந்தித்துப் பேசினர்.