இந்தியாவுக்கு மிரட்டல் விடுத்த தாலிபான் செய்தித் தொடர்பாளர் பற்றி துப்பு கொடுத்தால் ரூ.20 கோடி: பாக்
இஸ்லாமாபாத்: தெஹ்ரிக் இ தாலிபான் செய்தித் தொடர்பாளர் இஹ்சானுல்லா இஹ்சான் குறித்து தகவல் கொடுப்பவர்களுக்கு ரூ. 20 கோடி சன்மானம் வழங்கப்படும் என்று பாகிஸ்தான் அரசு அறிவித்துள்ளது.
இது குறித்து பாகிஸ்தான் உள்துறை அமைச்சர் ரஹ்மான் மாலிக் இஸ்லாமாபாத்தில் செய்தியாளர்களிடம் கூறுகையில், இஹ்சான் அன்னிய சக்திகளுக்கு வேலை பார்த்தார். அவர் குறித்த விவரங்களை விரைவில் வெளியிடுவோம். பணத்திற்காக போராளிகள் இஸ்லாத்தையும், ஷரியாவையும் இழிவுபடுத்தி வருகின்றனர் என்றார்.
இஹ்சான் அவ்வப்போது வடமேற்கு பாகிஸ்தானில் உள்ள நிருபர்களைத் தொடர்பு கொண்டும், பாகிஸ்தான் மற்றும் வெளிநாட்டு ஊடகங்களை தொடர்பு கொண்டும் தீவிரவாத தாக்குதல்களுக்கு பொறுப்பேற்பது குறித்தும், சில விவகாரங்களில் தாலிபான்களின் நிலைப்பாடு குறித்தும் தெளிவுபடுத்தி வருகிறார்.
மலாலா யூசுப்சாய் தாக்கப்பட்டதற்கு தாலிபான்கள் தான் பொறுப்பு என்பதை இஹ்சான் தான் அறிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் கசாப் மரணத்திற்கு பழிவாங்க தாலிபான்கள் இந்தியாவை தாக்குவோம் என்று அவர் கடந்த திங்கட்கிழமை மிரட்டல் விடுத்தார். ஆயுதங்களை ஒப்படைத்துவிட்டு சரணந்தால் அனைத்து போராளிகளுக்கும் மன்னிப்பு அளிக்கத் தயார் என்று ரஹ்மான் மாலிக் கூறியதை அவர் ஏற்க மறுத்தார்.