கர்நாடகத்தைக் கண்டித்து நாளை தஞ்சை, நாகை, திருவாரூரில் பந்த் -300 இடங்களில் பஸ், ரயில் மறியல்
தஞ்சாவூர்: தமிழகத்திற்கு உச்சநீதிமன்ற உத்தரவின்படி தண்ணீர் திறந்து விட மறுக்கும் கர்நாடக அரசைக் கண்டித்து காவிரி டெல்டாப் பகுதி மாவட்டங்களான தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டனம் ஆகிய மூன்று மாவட்டங்களிலும் நாளை முழு அடைப்புப் போராட்டம் நடத்தப்படுகிறது. மேலும் 300 இடங்களில் பஸ், ரயில் மறியல் போராட்டமும் நடத்தப்படவுள்ளது.
உச்சநீதிமன்றம் காவிரி நீரைத் திறந்து விடுமாறு தொடர்ந்து உத்தரவு மேல் உத்தரவு பிறப்பித்து வருகிறது. பிரதமரும் சொல்கிறார், காவிரி கண்காணிப்புக் குழுவும் சொல்கிறது... ஆனால் எந்த உத்தரவையும் மதிக்க முடியாது, தண்ணீர் திறந்து விட முடியாது என்று கர்நாடக அரசு தொடர்ந்து கூறி வருகிறது. உத்தரவுகளை செயல்படுத்த அது முனைந்தால் அரசியல்கட்சிகள், விவசாயிகளைத் தூண்டி விட்டுப் போராட்டம், வன்முறை என்று பாதை மாறிப் போவதால் பிரச்சினை மேலும் மேலும் வலுத்து வருகிறது.
கர்நாடகம் காவிரியில் தண்ணீர் தர மறுத்ததால் டெல்டா மாவட்டங்களான தஞ்சை, நாகை, திருவாரூரில் இந்த ஆண்டு குறுவை சாகுபடி நடக்கவில்லை. சம்பா சாகுபடிக்கும் தண்ணீர் தர கர்நாடகம் மறுத்து வருகிறது. இதனால், டெல்டா மாவட்டங்களில் சுமார் 10 லட்சம் ஏக்கர் சம்பா பயிர் தண்ணீரின்றி கருகி வருகிறது.
இந்நிலையில் காவிரியில் தமிழகத்துக்குரிய தண்ணீரை தர மறுக்கும் கர்நாடகாவை கண்டித்தும், தண்ணீர் பெற்றுத்தர மத்திய அரசை வலியுறுத்தியும் டெல்டா மாவட்டங்களான தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டனம் ஆகிய மூன்று மாவட்டங்களிலும் நாளை காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை முழு அடைப்புப் போராட்டத்திற்கு விவசாயிகள் சங்கம் அழைப்பு விடுத்துள்ளது. இதற்குப் பல்வேறு அரசியல் கட்சிகள், அமைப்புகள் ஆதரவு தெரிவித்துள்ளன.
பந்த்தின்போது 300 இடங்களில் பஸ் மறியல் மற்றும் ரயில் மறியல் போராட்டங்கள், மத்திய அரசின் அலுவலகங்கள் முற்றுகை உள்ளிட்ட போராட்டங்களை நடத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது.
பந்த்துக்கு ஆதரவு தெரிவித்து நாளை கடைகளும் அடைக்கப்படுகின்றன. மருந்துக் கடைகளையும் அடைக்கவுள்ளனர். தனியார் மருத்துவமனைகளும் மூடப்படுகின்றன.