திமுக ஆட்சியில் பெற்றதை எல்லாம் மறந்துவிட்டு பேசும் ராமதாஸுக்கு என் மேல் எவ்வளவு வன்மம்: கருணாநிதி

Subscribe to Oneindia Tamil

Karunanidhi and Ramadoss
சென்னை: திமுக ஆட்சியில் வன்னியர்களை உள்ளடக்கிய மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கு 20 சதிவகித இட ஒதுக்கீடு அளித்ததை எல்லாம் மறந்துவிட்டு எனக்கு வன்னியர் மீது வன்மம் என பேசுகிறார் என்றால் டாக்டர் ராமதாசுக்கு என் மீது எவ்வளவு வன்மம் உள்ளது என்பது புரிகிறது என திமுக தலைவர் கருணாநிதி தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள கேள்வி பதில் வடிவிலான அறிக்கையில் கூறியிருப்பதாவது,

கேள்வி: கூட்டணிக்காக கையேந்தும் நிலை பாமகவுக்கு இல்லை, தேர்தலில் தனித்து போட்டியிட திமுக தயாரா? என்றெல்லாம் டாக்டர் ராமதாஸ் கேட்டிருக்கிறாரே?

பதில்: அப்படியா? தமிழகத்தின் கடந்தகால அரசியல் சரித்திரத்தை உணர்ந்தவர்களுக்கு, கூட்டணிக்காக கையேந்தும் நிலையில் பாமக இல்லை என்பது உண்மையா என்று நன்றாகத் தெரியுமே! மத்திய அமைச்சராக இருந்த அன்புமணியைக் கேட்டாலே உண்மைகளைச் சொல்வாரே?

கேள்வி: பாமக மீதும் அதன் நிறுவனத் தலைவர் டாக்டர் ராமதாஸ் மீதும் சாதி வெறியைக் கிளப்பி, அவதூறு குற்றச்சாட்டுகளைத் தாங்கள் சுமத்தியிருப்பதாக டாக்டர் ராமதாஸ் சொல்லியிருக்கிறாரே?

பதில்: செய்தியாளர் ஒருவர் டாக்டர் ராமதாஸ் தொடர்ந்து சாதிப் பிரச்சனைகளை கிளப்புகின்ற வகையில் பேசிக் கொண்டே இருக்கிறாரே, அதைப்பற்றி அரசு நடவடிக்கை எடுக்கவில்லையே? என்று கேட்டபோது, சாதி வெறியை கிளப்புகிறவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது அரசு நடவடிக்கை எடுப்பதுதான் எங்களுடைய கருத்தும் வேண்டுகோளும் ஆகும் என்று தான் பதில் அளித்திருக்கிறேன். கேள்வி கேட்ட செய்தியாளர்கள் பாமக பற்றி கேட்ட போதிலும், நான் அளித்த எந்தப் பதிலிலும் பாமக என்ற வார்த்தையையோ, டாக்டர் ராமதாஸ் என்ற பெயரையோ பயன்படுத்தவே இல்லை.

"வன்னியர்கள் மீது கருணாநிதிக்கு எந்த அளவுக்கு வன்மம் இருக்கிறது என்பதை உணர முடிகிறது" என்றெல்லாம் பேசியிருக்கிறார் ராமதாஸ். வன்னியர்களை உள்ளடக்கிய மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கு தனி இடஒதுக்கீடு வேண்டுமென்று இவர்கள் போராட்டம் நடத்தி, அதிலே சிலர் உயிரிழக்க காரணமாக இருந்தார்களே தவிர வேறு எதுவும் நடைபெறவில்லை. திமுக ஆட்சிக்கு வந்த பிறகு தான், இவரை வீரபாண்டி ஆறுமுகம் மூலமாக நேரில் அழைத்து வரச் செய்து கலந்துரையாடி, மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கு 20 சதவிகித இட ஒதுக்கீடு திமுக ஆட்சியிலே வழங்கி 28-3-1989-ல் உத்தரவிடப்பட்டது.

இதையெல்லாம் டாக்டர் ராமதாஸ் வசதியாக மறந்து விட்டு அல்லது மறைத்துவிட்டு, வன்னியர்கள் மீது எனக்கு வன்மம் இருப்பதாகப் பேசியிருக்கிறார் என்றால், அவர் எந்த அளவிற்கு என் மீது "வன்மம்" கொண்டுள்ளார் என்பதை என்னால் புரிந்து கொள்ள முடிகிறது. டாக்டருக்கு மட்டுமல்ல; நான் எல்லோருக்கும் விடுக்கும் வேண்டுகோள் - வெறுப்பு அரசியல் வேண்டாமே!

கேள்வி: சில்லறை வர்த்தகத்தில் அன்னிய முதலீட்டை திமுக ஆதரிப்பதைப்போல தமிழ் நாட்டில் உள்ள மார்க்சிஸ்ட்கள் பிரச்சாரம் செய்கிறார்களே?

பதில்: இங்கேயுள்ள மார்க்சிஸ்ட் தோழர்கள் அந்தப் பிரச்சனையைத் திசை திருப்புவதற்காக அவ்வாறு அறிக்கைவிட்ட போதிலும், அந்தக் கட்சியின் அகில இந்தியப் பொதுச் செயலாளர் பிரகாஷ் காரத் பேசும்போது, காங்கிரஸ் கட்சி கூட்டணியில் உள்ள மிகப்பெரிய கூட்டணி கட்சியான திமுகவும் நேரடி அன்னிய முதலீட்டுக்கு எதிரானது என்று உண்மையை வெளிப்படையாகப் பேசியது மகிழ்ச்சி தருகிறது. மத்தியில் நிலையான அரசு வேண்டும் என்பதை மட்டும் கருதி இந்தப் பிரச்சனையில் மத்திய அரசை திமுகழகம் ஆதரிக்கும் என்று தெரிவித்திருக்கிறேன். திமு கழகத்தின் இந்த நிலைப் பாட்டினைத்தான் சிலர் மாற்றி கட்சிமாச்சர்யத்தோடும், உள்நோக்கத்தோடும் திசை திருப்பிப் பேசி வருகிறார்கள்.

கேள்வி: தமிழ்நாட்டில் வல்லூர், வட சென்னை மற்றும் மேட்டூர் அனல் மின் நிலையங்களில் கூடுதல் மின் உற்பத்தி செய்யப்படவிருப்பதால், மின்வெட்டு மிக விரைவில் தளர்த்தப்படும் என்று மின்வாரிய அதிகாரிகள் கூறியிருக்கிறார்களே?

பதில்: இந்த அனல் மின் நிலையங்கள் எல்லாம் எந்த ஆட்சிக் காலத்திலே தொடங்கப்பட்ட திட்டங்கள் தெரியுமா? திமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட திட்டங்கள் என்பதால் இந்த ஆட்சியினர் முதலில் இவற்றில் அக்கறை காட்டாமல் இருந்தார்கள். இப்போது நெருக்கடி வந்ததும், அக்கறை காட்டினார்கள் என்பது தான் உண்மை. தற்போது 16 மணி நேரம் மின் வெட்டினை நடைமுறைப்படுத்தியிருப்பதால், தினமும் 100 கோடி ரூபாய் வரை உற்பத்தி இழப்பு ஏற்பட்டு வருகிறது. இந்த நிலை தொடருமேயானால், பல தொழிற்சாலைகள் வேறு மாநிலங்களுக்கு இடம் பெயரும் நிலை இருப்பதாகச் சொல்லப்படுகிறது என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.

எப்.டி.ஐ. வாக்கெடுப்பில் மத்திய அரசு வென்றது மகிழ்ச்சி:

சில்லறை வர்த்தகத்தில் அன்னிய நேரடி முதலீடு குறித்து லோக்சபாவில் நேற்று நடந்த வாக்கெடுப்பில் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு வெற்றி பெற்றது மகிழ்ச்சியாக உள்ளது என்றார் கருணாநிதி. காவிரி பிரச்சனையில் உச்ச நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+