மும்பை கார்ப்பரேஷன் வார்டு அலுவலகத்தை அடித்து நொறுக்கி சூறையாடிய சிவசேனா!
மும்பை: மும்பை சிவாஜி பூங்காவில் பால்தாக்கரேவுக்கு நினைவு மண்டபம் அமைக்க முயன்றதை மும்பை மாநகராட்சி தடுத்ததால் அப்பகுதி வார்டு அலுவலகத்தை அடித்து நொறுக்கி சூறையாடியிருக்கின்றனர் சிவசேனா கட்சியினர்.
நினைவகம் அமைக்க கோரிக்கை
சிவசேனா தலைவர் பால்தாக்கரே கடந்த மாதம் 18-ந் தேதியன்று சிவாஜி பூங்காவில் தகனம் செய்யப்பட்டார். தகனம் செய்வதற்கு ஒருநாள் மட்டும் மும்பை மாநகராட்சி அனுமதி கொடுத்திருந்தது. அப்போதே பாஜக மூத்த தலைவர் முரளி மனோகர் ஜோஷி, சிவாஜி பூங்காவிலேயே பால்தாக்கரேவுக்கு நினைவு மண்டபம் அமைக்க வேண்டும் என்று கோரிக்கையை முன்வைத்தார். பின்னர் சிவசேனா கட்சியினரும் இந்த கோரிக்கையை வலியுறுத்தினர்.
சவான் நிராகரிப்பு
ஆனால் மகாராஷ்டிரா முதல்வர் பிரித்விராஜ் சவானோ இதனை நிராகரித்திருந்தார். சிவாஜி பூங்கா பகுதியை அமைதிப் பிரதேசமாக உயர்நீதிமன்றம் பிரகடனம் செய்திருப்பதால் அங்கு சட்டத்தை மீறி எதுவும் செய்யக் கூடாது என்றும் சிவசேனாவினர் சமாதி அமைக்கும் பணியை கைவிட்டுவிட்டு வெளியேற வேண்டும் என்றும் கூறியிருந்தார்.
இதைத் தொடர்ந்து மும்பை மாநகராட்சி நிர்வாகமும் சிவசேனாவினர் சிவாஜிபூங்காவில் இருந்து வெளியேற உத்தரவிட்டது. மும்பை மாநகராட்சியோ பாஜக-சிவசேனா வசம்தான் இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
சூறையாடல்
இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், தெற்கு மும்பையில் வோர்லியில் இருக்கக் கூடிய மும்பை மாநகராட்சி வார்டு அலுவலகத்தை நேற்று இரவு சிவசேனா கட்சியினர் அடித்து நொறுக்கி சூறையாடியிருக்கின்றனர். இந்த சூறையாடல் சம்பவத்தில் 7 பேர் வரை ஈடுபட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது.
இந்த சம்பவத்தைத் தொடர்ந்து அனைத்து வார்டு அலுவலகங்களுக்கும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருக்கிறது.












Click it and Unblock the Notifications