'ஆம் ஆத்மி' கட்சியின் தமிழக ஒருங்கிணைப்பாளர் கிறிஸ்டினா சாமி!

சுவாதி பெண்கள் இயக்கம்
கிராமங்களில் அடுப்படியில் முடங்கிக் கிடந்த பெண்களை எல்லாம் ஒன்று திரட்டி ஒரு குழுவாக அமைத்து சுவாதி பெண்கள் என்ற இயக்கம் கடந்த 1991ம் ஆண்டு உதயமானது. இந்த அமைப்பில் பெண்களுக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுக்கப்பட்டதால் கிராமங்களைத் தாண்டி பெரு நகரங்களிலும் இந்த அமைப்பில் அதிக அளவில் பெண்கள் இணைந்தனர்.
சமூக போராட்டம்
இந்த சமுதாயத்தை திருத்த வேண்டும் என்றால் முதலில் தெருவில் இறங்குவதை காட்டிலும் வீட்டில் இருந்து அதை துவங்க வேண்டும் என முடிவு செய்து மது அருந்தி வரும் கணவரை ஒரு கை பார்த்தனர். இதனால் பலர் மனம் திருந்தினர். அடுத்து கிராமங்களிலும், நகரங்களிலும் இருந்து வந்த சாராயக் கடைகளை அடித்து நொறுக்கினர். சாராய வியாபாரிகளை ஓடஓட விரட்டியடித்தனர். இதன் மூலம் இந்த அமைப்பினர் மீது மதிப்பும், மரியாதையும் அதிகரித்தது.
சவால்
இதனையடுத்து காவிரி ஆற்றி்ல் மணல் அள்ளுவதை தடை செய்யக் கோரி இந்த அமைப்பினர் நடத்திய போராட்டம் தமிழகத்தையே திரும்பிப் பார்க்க வைத்தது. அன்று கரூர் மாவட்ட கலெக்டராக இருந்த ஒருவரின் உருவ பொம்மையை பாடை கட்டி ஊர்வலமாக கொண்டு சென்றனர். இதனால் நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் போலீசாரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். மேலும், மணல் கடத்தும் குண்டர்கள் இவர்களது அலவலகத்திற்கு தீ வைத்தனர். இதில் உயிர் சேதம் ஏதும் இல்லை என்றாலும், அதிக அளவில் பொருட்சேதம் ஏற்பட்டது.
அரசியல் பாதை
இதனையடுத்து பெண்களுக்கும் சம உரிமை வேண்டும், நாங்கள் வாக்கு வங்கியாக மட்டும் இருக்க விரும்பவில்லை, எங்கள் உரிமையை போராடி பெறுவோம் என பெண்கள் முன்னணி என்ற அமைப்பில் இணைந்து அரசியல் களத்தில் குதித்தனர். அதன் மூலம் உள்ளாட்சி மன்றத் தேர்தல், சட்ட மன்றத் தேர்தல், நாடாளுமன்ற தேர்தல் என அனைத்து தேர்தல்களிலும் குதித்து பலம் வாய்ந்த திமுக, அதிமுக போன்ற கட்சிகளையே மிரள வைத்தனர்.
ஆம் ஆத்மி கட்சி
அமைத்தி புறாவாக இருந்த பெண்களை புரட்சிப் புயலாக மாற்றிய பெருமை கிறிஸ்டினா சாமி என்பவரையே சாரும். பெண்ணுரிமைப் போராளி, மனித உரிமைப் போராளி என அழைக்கப்படும் கிறிஸ்டினா தனி நபராக இருந்து இது போன்ற குழுக்களை உருவாக்கி அரசியல் பயணத்தில் ஈடுபட்டுள்ளார். கிறிஸ்டினா சாமி பெண்கள் முன்னேற்றம் குறித்து பேசவும், அறியவும் பல நாடுகளுக்கு சென்று வந்தவர். இந்த நிலையில் ஊழலுக்கு எதிராகப் போராடும் அர்விந்த் கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி கட்சியின் தேசிய செயற்குழு உறுப்பினராகவும், தமிழக ஒருங்கிணைப்பாளராகவும் கிறிஸ்டினா சாமி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
என்ன சொல்கிறார் கிறிஸ்டி
சாதாரண மக்கள் தற்போது உள்ள அரசியல் கட்சிகள் மீதும், அரசியல்வாதிகள் மீதும் மிகுந்த வெறுப்பில் உள்ளனர். பெரும்பாலான கட்சிகள் ஊழல் பின்னணி கொண்டவையாக இருப்பதால் வெறுக்கின்றனர். சாமானிய மக்களின் உரிமை, வாழ்வாதராம் போன்றவை பாதிக்கப்பட்டுள்ளது. அவைகளை மீட்டு எடுக்கவும் பெண்ணுரிமை, மனித உரிமை போன்றவைகளுக்காக போராடவும் முடிவு செய்துள்ளோம் என்றார் கிறிஸ்டினா சாமி.












Click it and Unblock the Notifications