மக்கள் படும் பாட்டைப் பார்க்கையில் தான் ஆட்சியைப் பிடிக்கவே தோன்றுகிறது: ஸ்டாலின்

முன்னாள் சட்டசபை உறுப்பினர் பி.கே. சேகர்பாபு ஏற்பாடு செய்திருந்த நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா சென்னை ராயபுரம் எஸ்.என்.செட்டி தெருவில் உள்ள அன்பகத்தில் நேற்று மாலை நடந்தது. அதில் கலந்து கொண்ட திமுக பொருளாளர் முக ஸ்டாலின் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
விழாவில் அவர் பேசியதாவது,
கருணாநிதி மற்றும் என்னுடைய பிறந்தநாள்களை முன்னிட்டுத் தான் நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுவதாக செய்திகள் வருகின்றன. கருணாநிதியின் பிறந்தநாள் ஜூன் 3ம் தேதியும், எனது பிறந்தநாள் மார்ச் 1ம் தேதியும் வருகிறது. இப்படி பிறந்தநாளையொட்டி நலத்திட்ட உதவிகள் வழங்குவதால் 6 முதல் 3 மாதத்திற்கு ஒரு முறை பிறந்தநாள் வரக்கூடாதா என்று தோன்றுகிறது. வயதைக் கூறினால் ஆயுள் குறையும், அழகு கெடும் என்று நினைக்கின்றனர். கருணாநிதிக்கு வயது 89, பேராசிரியருக்கு 90, திமுகவுக்கு 100 வயது ஆகிறது. இது போன்ற வரலாறு உலகில் உள்ள வேறு எந்த இயக்கத்திற்கும் கிடைத்திருக்காது.
ஆட்சியில் இருந்தாலும் சரி இல்லாவிட்டாலும் சரி திமுக ஒரு நாளும் துவண்டு போவதில்லை. ஆட்சியில் இல்லாமல் மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்குவது மகிழ்ச்சி அளிக்கிறது. ஆனால் மக்கள் படும் அவஸ்தையைப் பார்க்கையில் தான் ஆட்சியைப் பிடிக்க வேண்டும் என்று தோன்றுகிறது. திமுக 5 முறை ஆட்சிக்கு வந்துள்ளது. அப்போதெல்லாம் யாரும் நினைத்துக் கூட பார்க்காத பல சாதனைகளைச் செய்துள்ளது.
கருணாநிதி இவ்வளவு திட்டங்களை கொண்டு வந்தார் என்றால் ஜெயலலிதா இன்னும் எத்தனை திட்டங்களை கொண்டு வருவார் என்ற எதிர்பார்ப்பில் தான் மக்கள் வாக்களித்தனர். அதிமுகவை நம்பி வாக்களித்த மக்கள் தற்போது ஏமாற்றம் அடைந்துள்ளனர். கடந்த மாதம் தஞ்சையில் மாணவர்களுக்கு இடையேயான பேச்சுப்போட்டி நடந்தது. அப்போது ஒரு மாணவன் பேசுகையில், ஏ.எம்., பி.எம். பார்ககாமல் உழைத்த ஒரே சி.எம். கருணாநிதி தான் என்றான். இதன் மூலம் தற்போதைய அரசியல் சூழலை மாணவர்கள் நன்கு புரிந்து வைத்துள்ளது தெரிகிறது என்றார்.












Click it and Unblock the Notifications