டெங்கு.. நெல்லை அரசு மருத்துவமனையிலும் நிலவேம்பு கசாயம் வினியோகம்
நெல்லை: நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலும் டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்தும் நில வேம்பு கசாயம் நேற்று முதல் வழங்கப்படுகிறது.
டெங்கு உள்ளிட்ட விஷ காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் பாதிப்பு வராமல் முன்னெச்சரிக்கையாக தடுப்பதற்கும் நிலவேம்பு கசாயம் வழங்கப்பட்டு வருகிறது. கடந்த 6 நாட்களாக நெல்லை அரசு சித்த மருத்துவக் கல்லூரியில் சிறப்பு முகாம் தொடங்கி இக்கசாயம் வழங்கப்பட்டு வருகிறது. 6 நாளில் 6,000க்கும் மேற்பட்டவர்கள் இந்த மூலிகை நீரை பருகி பயன் அடைந்துள்ளனர். மருத்துவக் கல்லூரி பயிற்சி டாக்டர்கள் மற்றும் மாணவர்கள் கூடுதல் ஆர்வத்துடன் இப்பணியை மருத்துவமனை டாக்டர்கள் மற்றும் ஊழியர்களுடன் இணைந்து செய்து வருகின்றனர்.
இதற்கிடையே நிலவேம்பு கசாயம் குறித்து மக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மாணவர்கள் 10,000 துண்டு பிரசுரங்களை தயாரித்துள்ளனர். அதில் நிலவேம்பு குடிநீர் அருந்துவோம், டெங்கு காய்ச்சல் பாதிக்காத தமிழகத்தை உருவாக்குவோம் என குறிப்பிட்டு கசாயத்தின் சிறப்பு குறித்து விளக்கியுள்ளனர்.
இந்த துண்டு பிரசுரம் வினியோகிக்கும் நிகழ்ச்சி நெல்லை சித்த மருத்துவக் கல்லூரியில் நடந்தது. நிகழ்ச்சியில் நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி டீன் டாக்டர் மனோகரன் தலைமை வகித்து விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை வினியோகித்து பிரச்சாரத்தை துவக்கி வைத்தார்.












Click it and Unblock the Notifications