பூரண மதுவிலக்கை வலியுறுத்தி 1,200 இளைஞர்களுடன் நடைபயணம் கிளம்பிய வைகோ
தமிழகத்தில் பூரண மதுவிலக்கை கொண்டு வர வலியுறுத்தி மதிமுக பொதுச் செயலாளர் வைகோ நெல்லை மாவட்டம் உவரியில் இருந்து இன்று நடைபயணம் மேற்கொள்ளப்போவதாக அறிவித்தார். அதன்படி அவர் இன்று காலை தனது நடைபயணத்தை உவரியில் இருந்து துவங்கினார். அவருடன் 1,200 இளைஞர்களும் கிளம்பினர்.
இன்று உவரியில் துவங்கிய நடைபயணம் நெல்லை, தூத்துக்குடி, விருதுநகர் மாவட்டங்கள் வழியாகச் சென்று வரும் 25ம் தேதி மதுரையில் நிறைவடைகிறது. இந்த பயணத்தின்போது வைகோ உள்ளிட்டோர் வழிநெடுகிலும் உள்ள கிராமங்கள், நகரங்களில் மதுவிலக்கு குறித்து பிரச்சாரம் செய்கின்றனர்.
ஒரு நாளைக்கு 25 கிமீ தூரம் நடக்கும் வைகோ 400க்கும் மேற்பட்ட கிராமங்களில் பிரச்சாரம் செய்கிறார். மேலும் மக்களுக்கு பூரண மதுவிலக்கு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் துண்டு பிரசுரங்களும் வழங்குகிறார். இந்நிலையில் வரும் 16ம் தேதி முதல் 22ம் தேதி வரை தமிழகம் முழுவதும் உள்ள மதிமுகவினர் அந்தந்த ஊர்களில் மதுவிலக்கு குறித்த பிரச்சார அட்டைகளை ஏந்தி நடைபயணம் செல்கின்றனர்.
மது பழக்கம் இல்லாத இளைஞர்கள் மட்டுமே தேர்வு செய்யப்பட்டு வைகோவுடன் நடைபயணத்தில் கலந்து கொண்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.