மீனவர் அல்லாதவர்களுக்கு வீடு ஒதுக்கீடு: நொச்சிக்குப்பத்தில் மீனவர்கள் உண்ணாவிரதம்
சென்னை: மீனவர்கள் அல்லாதவர்களுக்கு குடியிருப்புகளை ஒதுக்கீடு செய்திருப்பதாக கூறி சென்னை நொச்சிக்குப்பம் மீனவ மக்கள் இன்று உண்ணாவிரதம் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கலங்கரை விளக்கம் காமராஜர் சாலையில் உள்ளது நொச்சிக்குப்பம் மீனவர் குடியிருப்பு. 2004ம் ஆண்டு சுனாமியில் பாதிக்கப்பட்டவர்களுக்கு கடந்த 2008ம் ஆண்டு 1454 வீடுகள் கட்ட தமிழக அரசு உத்தரவிட்டது. அதில் தற்போது 620 வீடுகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. அந்த 620 வீடுகளில் மீனவர்கள் அல்லாத வெளியூர் நபர்களுக்கு 290 வீடுகளை ஒதுக்கி குடிசை மாற்று வாரிய அதிகாரிகள் கொள்ளையடித்துள்ளனர் என்பது மீனவர்களின் புகாராகும்.
காஞ்சிபுரம், வந்தவாசி மற்றும் சென்னையில் உள்ள வேறு ஏரியாவில் உள்ளவர்களுக்கு குடும்ப அட்டைகளை கொடுத்து அவர்களது இங்கு வசிப்பதாக காட்டி, எங்களுக்கு கட்டிய வீடுகளை மீனவர் சமுதாயத்துக்கு சம்மந்தமே இல்லாதவர்களுக்கு ஒதுக்கியுள்ளனர் என்பதும் நொச்சிக்குப்பம் மீனவர்களின் குற்றச்சாட்டு.
இது தொடர்பாக கமிஷனர் அலுவலகத்தில் புகார் கொடுத்தும், குடிசை மாற்று வாரிய அதிகாரிகளிடம் முறையிட்டும் எந்த வித நடவடிக்கையும் இல்லை என்று மீனவர்கள் தெரிவித்துள்ளனர். இதனால் இன்று நொச்சிக்குப்பம் குடியிருப்பு அருகே மீனவர்கள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
உண்ணாவிரதம் இருந்த மீனவ மக்களிடம் களங்கரை விளக்க போலீசார் அவர்களை கலைந்து போகுமாறு கூறினர். ஆனால் மீனவர்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். மீனவர்களுக்கு குடியிருப்புகளை ஒதுக்கும் வரை போராட்டத்தை தொடர உள்ளதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.