மோடியின் பிரதமர் கனவுக்கு பூஸ்ட்டாக அமைந்த குஜராத் தேர்தல் முடிவு!
குஜராத் மாநிலத்தில் இரண்டு கட்டங்களாக சட்டசபை தேர்தலுக்கான வாக்குப் பதிவு நடைபெற்றது. இதுவரை இல்லாத வகையில் 70%க்கும் அதிகமாக வாக்குகள் பதிவான போதே மோடியின் வெற்றி உறுதியானது.
குஜராத் மாநில சட்டசபை தேர்தலில் கடந்த காலத்தைவிட கூடுதலாக வெற்றி பெற்றுக் காட்டினால் பெருமிதத்தோடு மோடி தேசிய அரசியலுக்குப் பயணிப்பார் என்று கூறப்பட்டது. அந்த நிலையை தற்போது எட்டிப்பிடித்திருக்கிறார் மோடி
குஜராத்தைப் பொறுத்தவரையில் மோடி தனி ஒரு மனிதராக பாஜகவுக்கு வெற்றி பெற்றுக் கொடுத்திருப்பதால் அவர் பிரதமர் பதவிக்கான வேட்பாளர்தான் என்றும் பாஜகவில் ஒருதரப்பு முன்வைக்கிறது.
அதே நேரத்தில் மோடியை தேசிய அரசியலுக்குக் கொண்டு வருவதற்கு பாஜகவின் தாய் அமைப்பான ஆர்.எஸ்.எஸ். ஆதரவு அவசியம். ஆனால் ஆர்.எஸ்.எஸ். அமைப்பு மோடியை முழுமையாக ஆதரிக்கவில்லை. இதேபோல் மற்றொரு இந்துத்துவா அமைப்பான விஸ்வ ஹிந்து பரிஷத்தும் மோடியை ஏற்கவில்லை. குஜராத் மாநிலத்தில் அரசு அனுமதி பெறாத இந்து கோயில்களையும் இடிக்க உத்தரவிட்டார் என்ற கோபத்தில் இருக்கிறது ஆர்.எஸ்.எஸ். மேலும் ஆர்.எஸ்.எஸ். முன்னிறுத்தக் கூடிய பாஜக தலைவரான நிதின் கத்காரிக்கு எதிராக மோடி உருவெடுப்பதை அக்கட்சி விரும்பவும் இல்லை. ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் ஆதரவின்றி பாஜகவின் தலைவராகவோ பிரதமர் வேட்பாளராக அவர் முன்னிறுத்த வாய்ப்பில்லை என்றே கூறப்படுகிறது.
குஜராத் தேர்தல் மூலம் வெளிப்பட்டிருக்கும் சில உண்மைகளும் கூட அவரை ஒரு பிரதமர் வேட்பாளர் தகுதியிலிருந்து தொலைவில் நிறுத்தி இருக்கிறது. குஜராத் சட்டசபைத் தேர்தலில் சிறுபான்மை சமூகத்தைச் சேர்ந்த ஒருவர் கூட வேட்பாளராக நிறுத்தப்படவில்லை. நாட்டின் பிரதமர் பதவிக்குரிய வேட்பாளர் என்று கூறப்படுகிறவர் இப்படி முழுமையான மதவாதியாக செயல்படுவதை அவருக்கான ஆதரவு தளத்தையும் எட்டாத தொலைவுக்குக் கொண்டு போயிருக்கிறது. ஏற்கெனவே பீகார் முதல்வர் நிதிஷ்குமார், மோடியை பிரதமர் வேட்பாளராக்கக் கூடாது என்று கூறி வருகிறார். நிதிஷ் கருத்தை ஆமோதிப்பதுபோல்தான் இருக்கிறது மோடியின் செயல்பாடு.
மோடி தனி மனிதராக சாதித்திருந்தாலும் அவர் 'தேசிய' அரசியலுக்குள் நுழைவது அவ்வள்வு எளிதாக இருக்காது என்றே சொல்லப்படுகிறது. இருப்பினும் மோடியின் பிரதமர் கனவுக்கு "ஊக்கம்' தரக் கூடியதாக குஜராத் மாநில தேர்தல் முடிவுகள் அமைந்திருக்கின்றன.