காணாமல் போன தலித் மாணவர் கழுத்து அறுத்துக்கொலை; பதற்றம்.... சாலைமறியல்
சிதம்பரம்: சிதம்பரம் அருகே காணாமல்போன தலித் மாணவர் கழுத்து அறுத்துக்கொல்லப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். மாணவரின் உறவினர்கள் சாலைமறியலில் ஈடுபட்டதால் அங்கு பதற்றம் உருவானது.
சிதம்பரம் அருகே உள்ள ஸ்ரீ முஷ்னம் என்ற ஊரை சேர்ந்தவர் கோபால கிருஷ்ணன். இவர் அதே ஊரைச்சேர்ந்த வேறொரு சமுதாயத்தைச் சேர்ந்த துர்கா என்ற பெண்ணைக் காதலித்ததாக கூறப்படுகிறது. இருவரும் ஒரே கல்லூரியில் பி.சி.ஏ படித்து வந்துள்ளனர்.
இந்நிலையில் கோபால கிருஷ்ணன் கடந்த வாரம் காணாமல் போனார்.அவரை பெற்றோர் பல இடங்களில் தேடியும்,அவரைப்ற்றிய எந்த தகவலும் தெரியாமல் போனது.
இதனையடுத்து மாணவரின் தந்தை மாயக்கிருஷ்ணன் டிசம்பர் 14ம் தேதி போலீசில் புகார் தெரிவித்தார். போலீசார் எந்தவித நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை என்று தெரிகிறது. இதனைத் தொடர்ந்து அவர் கடந்த திங்கட்கிழமை சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தார்.
இந்நிலையில் மாணவர் கோபாலாகிருஷ்ணன் புதன்கிழமையன்று சேத்தியாதோப்பு அருகே ஏரி ஒன்றில் கழுத்து அறுபட்ட நிலையில், பிணமாக மீட்கப்பட்டார்.
காதல் விவகாரம் காரணமாகவே இக்கொலை நடந்துள்ளதாக மாணவர் கோபால கிருஷ்ணனின் உறவினர்கள் குற்றம்சாட்டினர். குற்றவாளிகளை உடனே கைது செய்யக்கோரி விடுதலை சிறுத்தைகள் கட்சியினருடன் அவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.இதனையடுத்து அப்பகுதியில் பதட்டம் ஏற்பட்டது. மேலும் அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்க சிதம்பரம், கடலூர் உள்ளிட்ட பகுதிகளில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
அண்மையில் தருமபுரி மாவட்டத்தில் வன்னியர் சமுதாயத்தைச் சேர்ந்த பெண்ணை, தலித் இளைஞர் ஒருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டதைத் தொடர்ந்து 3 தலித் கிராமங்களில் உள்ள சுமார் 250 வீடுகளில் பொருட்கள் சூறையாடப்பட்டு,வீடுகள் தீ வைத்து கொளுத்தப்பட்டன. அந்த சம்பவம் நிகழ்ந்து ஒரு மாத காலத்திற்குள் அடுத்த சம்பவம் நிகழ்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications