மோடியின் பதவியேற்பு நிகழ்ச்சியில் உருவெடுத்த புதிய தேசிய ஜனநாயகக் கூட்டணி?

குஜராத் தலைநகர் அகமதாபாத்தில் நரேந்திர மோடியின் பதவியேற்பு விழா நேற்று நடைபெற்றது. அகமதாபாத்தின் சர்தார் பட்டேல் மைதானத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் சுமார் 50 ஆயிரம் பேர் கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்ச்சியில் பல மாநில முதல்வர்களும் பாஜக மூத்த தலைவர்களும் கலந்து கொண்டனர். அதே நேரத்தில் மோடியின் பதவியேற்பு நிகழ்ச்சியில் கூட்டணிக் கட்சியின் முக்கிய தலைவர்கள் கலந்து கொள்ளவும் இல்லை. இது எதிர்கால தேசிய ஜனநாயகக் கூட்டணியை வெளிப்படுத்தும் வகையில் இருந்தது என்பதே நிதர்சனம்,
குஜராத்தில் மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றிய மோடிதான் 2014-ம் ஆண்டு லோக்சபா தேர்தலின் போது பாரதிய ஜனதா கட்சித் தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியின் பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்தப்படுவார் என்றே கூறப்படுகிறது. முன்னாள் பிரதமர் வாஜ்பாய் பிறந்தநாளையொட்டி குஜராத் அரசு வெளியிட்ட விளம்பரத்தில் "தேசிய நல்ல நிர்வாக நாள்" என்று வர்ணித்திருந்தது. இது மறைமுகமாக மோடியின் எதிர்காலத்தைக் குறிப்பிடுவதாகக் கருதப்படுகிறது. குஜராத்தில் நல்ல நிர்வாகத்தைக் கொடுத்த மோடியால் தேசிய அளவிலும் நல்ல நிர்வாகத்தைக் கொடுக்க முடியும் என்பதன் வெளிப்பாடுதான் இது என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள்.
மோடியின் பதவியேற்பு விழாவில் பாஜக தலைவர் சுஷ்மா ஸ்வராஜ்க்கு அடுத்த இருக்கையில் தமிழக முதல்வர் ஜெயலலிதா அமர்ந்திருந்தார்.
ஜெயலலிதாவின் பதவியேற்பு விழாவில் மோடியும் கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது.
தேசிய ஜனநாயகக் கூட்டணியின் முக்கிய கூட்டணிக் கட்சியாக இருக்கிறது ஐக்கிய ஜனதா தளம். ஆனால் மோடியை பிரதமர் வேட்பாளராக்க ஐக்கிய ஜனதா தளத்தைச் சேர்ந்த பீகார் முதல்வர் நிதிஷ்குமார் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார். நேற்றைய மோடியின் பதவியேற்பு விழாவிலும் நிதிஷ்குமார் கலந்து கொள்ளவில்லை. பீகார் துணை முதல்வரான சுஷில்குமாரும் கூட இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவில்லை.
இதேபோல் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் முன்பு இடம்பெற்றிருந்த பிஜூ ஜனதா தளமும் நேற்றைய பதவியேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவில்லை. இக்கட்சியைச் சேர்ந்த ஒடிஷா முதல்வர் நவீன்பட்நாயக், மோடியை பிரதமர் வேட்பாளராக்க கடும் எதிர்ப்பு தெரிவிக்கக் கூடியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதனால் மோடியை முன்னிறுத்தும் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் ஐக்கிய ஜனதா தளம் இடம்பெறாது- பிஜூ ஜனதா தளம் இடம்பெறாது..அதே நேரத்தில் அந்த இடத்தை அதிமுக பெறும் என்பதை வெளிப்படுத்தும் விதமாகவே நேற்றைய பதவியேற்பு விழா நிகழ்ச்சி வெளிப்படுத்தியது.
இதர தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கட்சிகளான அகாலி தளம் மற்றும் சிவசேனா சார்பில் பிரகாஷ் சிங் பாதல், உத்தவ் தாக்கரே ஆகியோர் கலந்து கொண்டனர். மகாராஷ்டிரா நவநிர்மான் சேனாவின் தலைவர் ராஜ் தாக்கரேயும் கலந்துகொண்டார்.
விஸ்வ ஹிந்து பரிசத் சார்பில் அசோக்சிங்கால் கலந்து கொண்டாலும் ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் தலைவர் மோகன் பகவத் உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் யாரும் கலந்து கொள்ளவில்லை. ஏற்கெனவே மோடிக்கும் ஆர்.எஸ்.எஸ். அமைப்புக்கும் ஏழாம் பொருத்தமாக இருந்து வருகிறது.
இவர்கள் தவிர கோவா முதல்வர் மனோகர், சத்தீஸ்கரின் ராமன்சிங், மத்திய பிரதேசத்தின் சிவ்ராஜ்சிங் சவுகான் ஆகியோரும் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
அதாவது 2014-ம் ஆண்டு லோக்சபா தேர்தலுக்கான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் பாஜக, அதிமுக, அகாலிதளம், சிவசேனா, மகாராஷ்டிரா நவநிர்மான் சேனா ஆகிய கட்சிகளே இடம்பெறக் கூடும் என்பதை வெளிப்படுத்தியது மோடியின் பதவியேற்பு நிகழ்ச்சி!












Click it and Unblock the Notifications