டாடா நிறுவன தலைவரானார் சைரஸ் மிஸ்ட்ரி!
தனது மாமாவான ஜே.ஆர்.டி. டாடாவுக்கு பிறகு டாடா குழுமத்தின் தலைமை பொறுப்பை 1991ம் ஆண்டில் ஏற்றுக் கொண்டார் ரத்தன் டாடா.
1991ம் ஆண்டில் ரூ.10,000 கோடியாக இருந்த நிறுவனத்தின் வருவாய் 2011-12ம் ஆண்டில் ரூ.4,75,721 கோடியாக அதிகரித்தது. இந்த வளர்ச்சியில் ரத்தன் டாடா முக்கியப் பங்காற்றியுள்ளார்.
அவரது நிர்வாகத்தின் கீழ் பல சர்வதேச நிறுவனங்களை டாடா கையகப்படுத்தியது. அதில் குறிப்பிடத்தக்கவை ஐரோப்பாவில் கொரஸ் ஸ்டீல் நிறுவனத்தை வாங்கியது, அதே போல இங்கிலாந்தின் ஜாகுவார் லேண்ட்ரோவர் கார் நிறுவனத்தை வாங்கியது, டெட்லி டீ நிறுவனத்தை வாங்கியது ஆகியவை அடங்கும்.
ரத்தன் டாடா ஓய்வு பெற்றதையடுத்து புதிய தலைவராக சைரஸ் மிஸ்ட்ரி நேற்று பொறுப்பு ஏற்றுக்கொண்டார். 1968 ஜூலை 4ம் தேதி பிறந்த மிஸ்ட்ரி லண்டன் இம்பீரியல் கல்லூரியில் சிவில் இன்ஜினியரிங் பட்டம் பெற்றார். பின் லண்டன் வணிகவியல் பள்ளியில் நிர்வாகவியல் முடித்தவர்.
இவர் டாடா நிறுவனத்தில் 18 சதவீத பங்குகளை வைத்திருக்கும் ஷாப்பூர்ஜி பல்லோன்ஜி குடும்பத்தைச் சேர்ந்தவர் ஆவார். இந்த நிறுவனத்தில் மிக அதிக பங்குகளை வைத்திருப்பது இவரது குடும்பமே. ரத்தனிடம் கூட இவ்வளவு பங்குகள் இல்லை. மிக சொற்பமாக பங்கே உள்ளது.
1868ம் ஆண்டு தோற்றுவிக்கப்பட்ட டாடா நிறுவனத்தின் 6வது தலைவர் மிஸ்ட்ரி ஆவார். இந்த நிறுவனத்தை உருவாக்கியது ஜாம்ஷெட்ஜி நுஸர்வான்ஜி டாடா ஆவார்.