லோக் ஆயுக்தா நீதிபதி நியமனத்தை எதிர்த்த மோடியின் மனுவை டிஸ்மிஸ் செய்த சுப்ரீம் கோர்ட்
குஜராத் மாநில லோக் ஆயுக்தா நீதிபதியாக மேத்தாவை ஆளுநர் கம்லா பேனிவால் கடந்த ஆண்டு ஜனவரி மாதம் அறிவித்தார். ஆனால் இதற்கு குஜராத் மாநில அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்தது. தங்களுடன் ஆலோசிக்காமல் ஆளுநர் இந்த முடிவை எடுத்ததாக அவர்கள் குற்றம் சாட்டியது மோடி அரசு. மேலும் இந்த நியமனத்தை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது.
அந்த வழக்கை விசாரித்த இரண்டு நீதிபதிகள் கொண்ட பெஞ்ச்சில் ஒரே மாதிரியான தீர்ப்பு வரவில்லை. ஒரு நீதிபதி நியமனத்தை சரி என்று கூறினார், இன்னொருவர் ரத்து செய்தார். இதையடுத்து மூன்றாவது நீதிபதியாக சஹாய் நியமிக்கப்பட்டார். அவரிடம் வழக்கு போனபோது குஜராத் அரசின் கோரிக்கையை கடுமையாக கண்டித்து, கோரிக்கையை நிராகரித்து தீர்ப்பளித்தார்.
மேலும், முதல்வர் நரேந்திர மோடி, தேவையில்லாமல் அரசியல்சாசன நெருக்கடியை ஏற்படுத்த முயல்வதாகவும் நீதிபதி சஹாய் கோபமாக கூறினார்.
இந்தத் தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் அப்பீல் செய்தது குஜராத் அரசு. இந்த மனுவை நீதிபதிகள் பி.எஸ்.செளஹான், இப்ராகிம் கலிபுல்லா ஆகியோர் கொண்ட பெஞ்ச் விசாரித்தது. பின்னர் குஜராத் மாநில அரசின் கோரிக்கையை நிராகரித்தும், குஜராத் உயர்நீதிமன்றத் தீர்ப்பை சரி என்றும் அறிவித்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.